பிங்கி பிராமனிக் வழக்கு: மேற்கு வங்கம் அரசு 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மேற்குவங்கத்தை சேர்ந்த தடகள வீராங்கனை பிங்கி பிரமானிக். உலக அளவில் நடைபெற்ற பல தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு, இந்தியாவிற்காக பதக்கங்களை பெற்றவர். இந்த நிலையில் அவருடன் வாழ்ந்து வந்த பெண் ஒருவர், பிங்கி தன்னை கற்பழித்துவிட்டதாக போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பிங்கி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதில் பிங்கிக்கு பாலின சோதனை நடத்துமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பாலின சோதனை தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்டது. ஆனால் இந்த சோதனை தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியானது.
இந்த நிலையில் பிங்கி தரப்பில் அளிக்கப்பட்ட ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரது நீதிமன்ற காவலை ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்துள்ளது. தற்போது ஆண்கள் சிறையில் உள்ள தனி அறையில் பிங்கி அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் பிங்கியின் மீது மனித உரிமை அத்துமீறல்கள் நடத்தப்படுவதாகவும், போலீசாரால் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேற்குவங்க அமைச்சரவையிலும் பெரும் அமளியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிங்கியிடம் நடைபெற்ற விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை, 2 வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி மேற்குவங்க அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மேற்கு வங்க மாநில விளையாட்டு துறை அமைச்சர் மதன் மிஸ்ரா கூறியதாவது,
பிங்கியின் விவகாரம் குறித்து இதுவரை எனக்கு எந்த புகாரும், அவரிடமிருந்தோ, அவரது குடும்பத்தினரிடம் இருந்தோ வரவில்லை. சட்ட ரீதியாக என்ன நடக்கிறது என்பது குறித்து எழுத்து பூர்வமான எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications