மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் இந்திய ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைக்கும்: பாரிவேந்தர்
மதுரை: மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் இந்திய ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைக்கும் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது குறித்து கூறியதாவது:
இந்திய ஜனநாயக கட்சி தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகின்றன. கட்சி தொடங்கி 8 மாதத்தில் 2011-ல் பொதுத்தேர்தலை எதிர்கொண்டு, 131 தொகுதிகளில் போட்டியிட்டோம். படித்த இளைஞர்களுக்கு நாங்கள் அரசியல் தளத்தை ஏற்படுத்திக்கொடுத்து, அதற்குள் அவர்களை கொண்டு வர விரும்புகிறோம்.
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மக்களின் நிரந்தர தேவையான மின்சாரத்தை தொடர்ந்து கொடுக்க நடவடிக்கை இல்லை. அ.தி.மு.க. ஆட்சி முடியும் வரை மின்சாரத்தை தொடர்ந்து முழுமையாக கொடுக்க முடியாது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்க உள்ளோம். அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம். அந்தக் கட்சிக்குத்தான் குடும்ப அரசியல் இல்லை. இது எங்கள் கட்சி கொள்கையுடன் ஒத்துள்ளது.
பா.ஜ.க ஆட்சியில் லஞ்சம் குறைவாக இருந்தது. தங்கநாற்கர சாலை போன்ற திட்டங்கள் பா.ஜ.க. ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டன. பா.ஜ.க. மதவாத கட்சி என்கிறார்கள். முதலில் நாம் எல்லோரும் இந்தியர் என்ற நிலை வரும் போது மதவாதம் என்ற நிலை வராது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications