நேரு-எட்வினா... அது ஆன்மாக்களின் காதல்!
குல்தீப் நய்யாரின் நூலிலிருந்து சில சுவாரஸ்யமான பகுதிகள்...
எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆர்வம் இருந்தது. அதாவது, மெளன்ட்பேட்டனின் மனைவி எட்வினாவுக்கும், ஜவஹர்லால் நேருவுக்கும் இடையிலான நட்பு குறித்த ஆர்வம் அது. நேருவிடம் எட்வினா கொண்டிருந்த தாக்கம் குறித்த அறியவும் எனக்கு ஆவல் இருந்தது.
1990ல் நான் இங்கிலாந்தில், இந்தியாவின் ஹைகமிஷனராக இருந்தேன். அப்போது எனக்கு கிடைத்த தகவல் என்னை வியப்படைய வைத்தது. நேருவும், எட்வினாவும் தினசரி கடிதங்களைப் பரிமாறிக் கொள்வார்களாம். எப்படி தெரியுமா...டெல்லியிலிருந்து நேரு ஏர் இந்தியா விமானம் மூலம் கடிதம் அனுப்புவாராம். அதை லண்டனில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் வாங்கி எட்வினாவிடம் கொடுப்பார்களாம். பிறகு அதற்கு பதில் கடிதம் எழுதி மீண்டும் ஏர் இந்தியா மூலம் அனுப்புவாராம் எட்வினா.
ஒரு நாள் கடிதம் வராவிட்டால் கூட அதிகாரிகளைத் துளைத்தெடுத்து விடுவாராம் நேரு. இப்படி விமானம் மூலம் தினசரி கடிதங்களைப் பரிமாறி வந்துள்ளனர் இருவரும்.
இங்கிலாந்தில் நான் இருந்தபோது எட்வினாவின் பேரன் லார்ட் ராம்சேயை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அப்போது நேரு டிரஸ்ட்டின் தலைவராக இருந்தார். லண்டனில் மெளன்ட்பேட்டன் உருவாக்கிய அமைப்பு இது. நேருவின் ஞாபகார்த்தமாக இதை அமைத்திருந்தார். ஹைகமிஷனராக இருந்ததால் நானும் அந்த டிரஸ்ட்டில் ஒரு உறுப்பினராக இருந்தேன். இதனால் நான்கைந்து முறை ராம்சேயை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
ராம்சேயுடன் நல்ல நெருக்கம் ஏற்பட்டதாக நான் உணர்ந்தவுடன் அவரது பாட்டிக்கும், நேருவுக்கும் இடையிலான நட்பு குறித்து அவருடன் பேசினேன். அவர் ஒன்றும் தவறாக நினைத்துக் கொள்ளவில்லை. நேருவின் கடிதம் குறித்து அவரிடம் பேசியபோது நேரு அழகாக எழுதியுள்ளார் என்றேன்.
அதற்கு அவர், எனது பாட்டியும் அழகாக எழுதியுள்ளார் என்றார். அதற்கு நான் நேரு எழுதிய கடிதங்களை நான் பார்த்துள்ளேன், ஆனால் உங்களது பாட்டி கடிதம் எதையும் பார்த்ததில்லை, படிக்கக் கிடைக்குமா என்று கேட்டேன். அதற்கு நேரடியாக பதில் செல்லாத அவர், நானும் ராஜீவ் காந்தியும், எங்களது தாத்தா, பாட்டியின் சில கடிதங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளோம் என்றார்.
பின்னர், சரி நேருவும், எட்வினாவும் காதலித்தார்களா என்று ராம்சேயிடம் நேரடியாகவே கேட்டேன். அதைக்கேட்டு முதலில் சிரித்தார். பின்னர், அது எப்படி அதைக் காதல் என்று நீங்கள் முடிவு செய்தீர்கள் என்று கேட்டார். பிறகு அவரே தொடர்ந்து, அது ஆத்மார்த்தமான காதல். ஆன்மாவின் காதல் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், அவர்கள் காதலில் விழுந்தனர். ஆனால் அதை இப்போது நம்மால் புரிந்து கொள்ள முடியாது. இப்போதெல்லாம் காதல் என்றால் செக்ஸ் குறித்துத்தான் முதலில் பேசுகிறார்கள். ஆனால் அன்று அப்படி இல்லை, நேரு, எட்வினாவுக்கு இடையே அப்படி இல்லை. அது ஆத்மார்த்தமான காதல். ஆத்மாவுக்கும், ஆத்மாவுக்கும் இடையே ஏற்பட்ட காதல். நேரு ஒரு கெளரவமான மனிதர். அடுத்தவர் மனைவியை, குறிப்பாக நண்பரின் மனைவியை அவர் மயக்க நினைத்ததில்லை, அப்படிச் செய்யவும் இல்லை என்றார்.