பிரதமராக நான் ரெடி: நரேந்திர மோடி
புனே: பிரதமர் பதவிக்கு தான் போட்டியிட ஆயத்தமாகி வருவதை சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
வருகிற லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கு நிறுத்த கமுக்கமாகவும், வெளிப்படையாகவும் முயன்று வருகிறார்கள்.
இந் நிலையில் இப்போது மோடியே தனது வாயால் தான் பிரதமர் பதவியில் அமரத் தயார் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் புனேவுக்கு போயிருந்தார் மோடி. அங்கு சமஸ்கிருத அறிஞர் பண்டிட் வசந்த் காட்கிலின் 60 ஆண்டு சமஸ்கிருத மொழிச் சேவையைப் பாராட்டி நடந்த விழாவில் அவர் பங்கேற்றார்.
அப்போது காட்கில் பேசுகையில், மோடியை இந்தியாவின் பிரதமராக அமர்த்த வேண்டும். அவர்தான் அதற்குச் சரியான நபர். பிரதமர் மோடியால், இந்தியாவை மிகப் பெரிய வல்லரசு நாடாக்க முடியும். குஜராத்தைப் போல இந்தியாவையும் அவர் வளமை மிக்க ஒரு தேசமாக மாற்றுவார் என்றார்.
அடுத்துப் பேசிய மோடி, உங்களது ஆசிர்வாதங்களை எனக்குத் தாருங்கள். நான் காட்கிலின் ஆசையை நிறைவேற்றிக் காட்டுகிறேன் என்றார். இதன் மூலம் பிரதமர் பதவிக்கு தான் தயார் என்பதை சூசகமாகக் காட்டியுள்ளார் மோடி.
மோடி மேலும் பேசுகையில், புனே, சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஊராகும். புனே மக்களின் ஆசிர்வாதங்கள் சக்தி மிக்கவை, அவர்கள் ஆசிர்வதித்தால், அதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.