சுடுகாட்டை உருவாக்குவதா அமைதி? டிரம்ப் நிபந்தனைகளுக்கு ஈரான் ஆவேச பதிலடி! மீண்டும் வெடிக்கும் போர்?
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், போர் நிறுத்தம் தொடர அமெரிக்கா ஐந்து கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. இது பதற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்கிறது. போர்க்களத்தில் சாதிக்க முடியாததை, சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அமெரிக்கா பறிக்கப் பார்க்கிறது என்று ஈரான் ஊடகங்கள் கொதித்து வருகின்றன.
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதன் பின், ஏப்ரல் 8ம் தேதி தற்காலிகப் போர்நிறுத்தம் எட்டப்பட்டது. ஆனால், நிரந்தரப் போர் நிறுத்தத்தில் உடன்பாடு எட்டப்படாமலேயே இருக்கிறது.

அமெரிக்காவின் நிபந்தனைகள்
இதற்கிடையே இப்போது நிரந்தர அமைதிக்காக அமெரிக்கா முன்வைத்துள்ள நிபந்தனைகள் ஈரானை அதிரவைத்துள்ளன. ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகள்:
- நஷ்டஈடு கிடையாது: முந்தைய பொருளாதாரத் தடைகள் மற்றும் கொள்கை முடிவுகளால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு அமெரிக்கா இழப்பீடு எதுவும் வழங்காது.
- யுரேனியம் ஒப்படைப்பு: ஈரானிடம் இருக்கும் 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்.
- அணு உலைகளுக்குப் பூட்டு: ஈரானின் அணுசக்தி நிலையங்களில் ஒரே ஒரு வளாகம் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும்; மற்றவை மூடப்பட வேண்டும்.
- சொத்துக்கள் முடக்கம்: சர்வதேச வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதியில் 25 சதவீதத்தைக் கூட விடுவிக்க முடியாது.
- முடிவில்லாத அச்சுறுத்தல்: லெபனான் உள்ளிட்ட பல்வேறு முனைகளில் நடக்கும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவது இந்த பேச்சுவார்த்தையின் வெற்றியைப் பொறுத்தே அமையும்.
ஈரான்
அதேநேரம் அமெரிக்காவின் இந்த நிபந்தனைகளை ஒருதலைப்பட்சமாக இருப்பதாகச் சொல்லி நிராகரித்துள்ள ஈரான், பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமெனில் தங்களின் 5 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. ஈரானின் நிபந்தனைகள்
- லெபனான் உட்பட அனைத்துப் போர்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- ஈரான் மீதான அனைத்துப் பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட வேண்டும்.
- முடக்கப்பட்ட ஈரான் நிதிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
- உலக எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும்.
சுடுகாட்டை உருவாக்குகிறார்கள்
இருப்பினும், ஈரானின் இந்த நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்க மறுக்கிறது. இதுவே சிக்கல் தொடர காரணம். ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், அமெரிக்காவின் இந்த நகர்வுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இது அவர்களின் வழக்கமான தந்திரம்.. முதலில் ஒரு நெருக்கடியையும் போரையும் உருவாக்குவார்கள், பின்னர் அமைதியை மீட்டெடுக்கிறோம் என்ற போர்வையில் ஆக்கிரமிப்பைத் தீவிரப்படுத்துவார்கள். சுடுகாட்டை உருவாக்கிவிட்டு அதற்குப் பெயர் 'அமைதி' என்பார்கள். தங்களின் ராணுவ தோல்வியை மறைக்கவே அமெரிக்கா இதைச் செய்கிறது" என்று சாடினார்.
டிரம்ப்
மேலும், ஈரானின் அம்ச அமைதித் திட்டத்தை டிரம்ப் நிராகரித்ததைத் தொடர்ந்து, ஈரானிய நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப், "அமெரிக்கா எங்கள் திட்டத்தை ஏற்காவிட்டால், அதற்கான விலையை அமெரிக்க மக்கள் கொடுக்க வேண்டியிருக்கும்" என்றார். அதேபோல ஈரான் ராணுவமும், "எங்களின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால்.. இன்னும் கடுமையான மற்றும் நசுக்கக்கூடிய அடிகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும்" என எச்சரித்துள்ளது.
மத்தியக் கிழக்கில் அமைதி திரும்புமா என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. வளைகுடாவில் அமைதி திரும்பினால் மட்டுமே கச்சா எண்ணெய் விலை குறைந்து, சர்வதேச நெருக்கடியைக் குறைக்கும்!












Click it and Unblock the Notifications