ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு: தேமுதிகவுக்கு எதிரான மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி
சென்னை : குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகள் செயலை சட்ட விரோதம் என்று அறிவிக்க கோரிய பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னையை சேர்ந்த ஏ.பி.ஜெயராமன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-
குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 19-ந்தேதி அறிவித்து இருந்தார். இதேபோல இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயற்குழுவும் குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இந்த இரு கட்சிகளும் சட்டப்பூர்வ கடமையாற்றுவதில் இருந்து தவறி உள்ளன.
தே.மு.தி.க.வுக்கு 29 எம்.எல்.ஏ.க்களும், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 8 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிக்கும் அவர்களது செயலை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறினர். மேலும் அந்த பொதுநலமனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.












Click it and Unblock the Notifications