நெல்லை அருகே 10ம் வகுப்பு படித்த போலி டாக்டர் கைது: மருந்து, ஊசி பறிமுதல்
நெல்லை: நெல்லை அருகே 10ம் வகுப்பு படித்துவிட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள கூந்தன்குளத்தைச் சேர்ந்தவர் சேர்மதுரை. அவர் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பல்வேறு மருந்து கடைகளில் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து தனக்கு தெரிந்தவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்துள்ளார். அவரது கைராசியை நம்பி தினமும் பொதுமக்கள் அவரை நாடினர்.
இதனால் அவர் கூந்தன்குளத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக கிளினிக் தொடங்கி நடத்தி வந்தார். இது குறித்து மூலக்கரைபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் போலீசார் சேர்மதுரையின் கிளினிக்கிற்கு சென்று விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மருந்து, மாத்திரைகள், ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையின்போது விஜயநாராயணம் அருகே கிளினிக் நடத்தி சேர்மதுரையும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.