பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஓடிப் போன ஆண்... அவர்களின் கணவன், மனைவி சேர்ந்து போலீஸில் புகார்!
சென்னை: செல்போன் மூலம் ஏற்பட்ட கள்ளக்காதலைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த நபரும், அவரது பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியும் வீட்டை விட்டு ஓடிப் போய் விட்டனர். இதனால் அதிர்ச்சி கம்ப்யூட்டர் நிறுவனக்காரரின் மனைவியும், ஓடிப் போன பெண்ணின் கணவரும் சேர்ந்து வந்து போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
எங்கு பார்த்தாலும் கள்ளக்காதல்.. இதில் சென்னை பரங்கிமலை மட்டும் விதி விலக்காகி விட முடியுமா என்ன... அந்தப் பகுதியில் வசித்து வருபவர் 38 வயதான நந்தகோபால். கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். ஆனால் குழந்தைகள் எதுவும் இல்லை.
இந்த நிலையில், தனக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் அஞ்சய்யன் என்பவரின் மனைவி ஜெயந்தியுடன் செல்போன் மூலம் கள்ளக்காதலை வளர்த்து வந்தார் நந்தகோபால். ஜெயந்திக்கு 6 வயதில் ஜெனீபர் என்ற குழந்தை உள்ளது.
இருவர் வீட்டிலும் யாரும் இல்லாத நேரமாக பார்த்து இவர்கள் இருவரும் ஒன்று கூடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது ஒரு நாள் லதாவுக்குத் தெரிந்து விட்டது. இதையடுத்து இருவரையும் கூப்பிட்டுக் கண்டித்துள்ளார் அவர். அதேபோல அஞ்சய்யனும் இது தவறு என்று கண்டித்துள்ளார்.
ஆனால் கள்ளக்காதலுக்குத்தான் கண், காது, மூக்கு என எதுவுமே கிடையாதே. இதனால் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் கள்ளக்காதலைத் தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில், நந்தகோபாலாலும், ஜெயந்தியும் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி விட்டனர். போகும்போது தனது மகளையும் கூட்டிக் கொண்டு போய் விட்டார் ஜெயந்தி.
இதை சற்றும் எதிர்பாராத ஜெயந்தியின் கணவரும், நந்தகோபாலின் மனைவியும் அதிர்ச்சியில் மூழ்கினர். இதையடுத்து இருவரும் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று அங்கு கூடுதல் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர்.
ஓடிப் போன பெண்ணின் கணவரும், ஆணின் மனைவியும் ஜோடியாக வந்து தங்களது கணவர், மனைவியை மீட்டுத் தருமாறு கோரி புகார் கொடுத்ததால் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.