பிரதமர் வேட்பாளரை அறிவிக்க தேவையில்லை: மோடிக்கு யஷ்வந்த் சின்ஹா எதிர்ப்பு?
டெல்லி: பிரதமர் பதவிக்கான வேட்பாளரை பாஜக இப்போதே அறிவித்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று அக் கட்சியின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
2014ம் ஆண்டு நாடாளுமன்றத் பாஜக சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று பேசப்பட்டு வரும் நிலையில் சின்ஹா இவ்வாறு மாற்றுக் கருத்தைக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவர் கூறுகையில், கடந்த காலத்தில் செய்தது போல பிரதமர் வேட்பாளராக ஒருவரை அறிவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், அடுத்த அரசை அமைக்கும் நிலையில் பாஜக இருந்தால் அப்போது பிரதமர் யாரென்று தீர்மானிக்கலாம்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் மோடிக்கும் ராகுல் காந்திக்கும் இடையிலான போட்டியாக இருக்கும் என்று இப்போதே கூறுவது முதிர்ச்சியற்ற கருத்து. தேர்தலுக்கு இன்னும் 22 மாதங்கள் உள்ளன. ஆனால், ஊடகங்கள்தான் இது பற்றி இப்போதே பெரிதாகப் பேசி வருகின்றன. உண்மையில் பிரதமர் வேட்பாளர் பற்றி எந்தப் பேச்சும் இப்போது இல்லை.
2014ம் ஆண்டு தேர்தலின்போது யாரை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது என்பது பற்றி எந்த விவாதமும் பாஜகவில் இதுவரை நடக்கவில்லை. 2002ம் ஆண்டில் குஜராத்தில் மதக் கலவரங்கள் நடந்தபோது மோடியை ஊடகங்கள் குற்றவாளியாக சித்தரித்தன. இப்போது அதே ஊடகங்கள் அவரை பிரதமர் வேட்பாளர் என்கின்றன என்றார் சின்ஹா.
இதன்மூலம் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை அவர் எதிர்ப்பது தெளிவாகிறது.