சென்னை ஏர்போர்ட்டில் ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா: சரக்கு ஏற்றும் பணி பாதிப்பு
சென்னை விமான நிலையத்தில் கட்டுப்பாட்டு அதிகாரியாக உள்ள லூகாஸ் டேவிட் இன்று விமான நிலையப் பணிகளை மேற்பார்வையிட்டுள்ளார். அப்போது ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் அனுமதி மறுக்கப்பட்ட வழியாக வருவதைப் பார்த்துள்ளார். உடனே அவர் அந்த இருவரையும் அழைத்து ஏன் இந்த வழியாக வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக அவருக்கும் ஒப்பந்த ஊழியர்கள் இருவருக்கும் இடையே சூடான வாக்குவாதம் நடந்துள்ளது. இதையடுத்து அவர் அவர்களின் அடையாள அட்டைகளை வாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஒப்பந்த ஊழியர்கள் திடீர் என்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஓடுதளத்தில் வேலை பார்த்த ஊழியர்களும் தர்ணாவில் ஈடுபட்டதால் விமானத்தில் சரக்குகள் ஏற்றும் பணி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த விமான நிலைய இயக்குனர் சுரேஷ், மேனேஜர் சரவணனும் அங்கு விரைந்து வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.