அரசியலில் ஆர்வமுள்ள பெண்ணா நீங்கள்? ஐஐஎம் பெங்களூருக்கு போங்க!
இந்தியாவில் புகழ்பெற்ற பிசினஸ் ஸ்கூல்களில் ஒன்றான பெங்களூர் ஐஐஎம்-ன் பொது கொள்கை மையம் மற்றும், டெல்லியில் உள்ள சமூக ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து அரசியலில் ஆர்வமுள்ள பெண்களின் திறமைகளை மேம்படுத்தவும், தலைமையேற்று நடத்தும் திறனை மேம்படுத்தவும் ஆளுமையில் இந்திய பெண்கள் என்ற 10 வார சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. நேற்று ஐஐஎம் பெங்களூரில் நடந்த விழாவில் இந்த படிப்பை ராஜஸ்தான் ஆளுநர் மார்கரெட் ஆல்வா துவக்கி வைத்து பேசினார்.
அவர் தனது உரையில் கூறியதாவது, இந்தியாவில் மேலும் பல பெண் அரசியல் தலைவர்கள் தேவை. கொள்கை அறிவு, அரசியல் திறன், தனிப்பட்ட வளர்ச்சி உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய இந்த படிப்பு பாராட்டுக்குரியது. இந்தியாவை மேலும் வலுப்படுத்த, இந்தியாவின் தலைவிதியை நிர்மானிப்பதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் செயல்பட நம்மை நாமே வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் அவர் இந்தியாவின் தலைசிறந்த பெண் தலைவர்களான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் பணி புரிந்த தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
பெங்களூர் ஐஐஎம்-ன் பொது கொள்கை மைய தலைவர் பேராசிரியர் ராஜீவ் கவுடா, ஐஐஎம் பெங்களூரின் டைரக்டர் பேராசிரியர் பங்கஜ் சந்திரா உள்ளிட்டோர் இந்த புதிய படிப்பின் மகத்துவம் பற்றி உரையாற்றினார்கள்.