குவஹாத்தி இளம்பெண் மானபங்க சம்பவத்தின் முக்கிய குற்றவாளி புவனேஸ்வரில் தலைமறைவு: முதல்வர் கோகய்
குவஹாத்தி: நாட்டையே உலுக்கிய குடிகார கும்பல் ஒன்றினால் இளம்பெண் மானபங்கப்படுத்தப்பட்ட சம்பவத்தின் முக்கிய குற்றவாளி அமர்ஜோதி கலிதா தற்போது ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் பதுங்கியிருப்பதாக அசாம் மாநில முதல்வர் அருண் கோகய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
இளம்பெண் மானபங்க சம்பவத்தில் முக்கிய குற்றவாளி அமர்ஜோதி கலிதா தற்போது ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் இருக்கிறான். அவனது செல்போனை தொடர்ந்து கவனித்து வருகிறோம். இது தொடர்பாக ஒடிஷா போலீசாருடன் அசாம் போலீசார் தொடர்பு கொண்டு பேசிவருகின்றனர். அவனை எப்படியும் பிடித்துவிடுமோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவனது இருப்பிடம் குறித்து தகவல் தருவோருக்கு ரூ1 லட்சம் பரிசுத் தொகை தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் டிவி நிருபரின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.
இச்சம்பவத்தில் மொத்தம் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.