குன்னூரில் சிங்கள ராணுவ அதிகாரிகள் முகாம்- கண்டனம் தெரிவித்து மதிமுகவினர் சாலை மறியல்
குன்னூர்: வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு வந்த இலங்கை ராணுவ அதிகாரிகளை வெளியேற்ற கோரி நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட மறுமலர்ச்சி திமுகவினர் 52 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர்கள் தமிழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள இலங்கை ராணுவ அதிகாரிகள் வந்துள்ளனர். தற்போது குன்னூரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். அவர்கள் நேற்று ஊட்டிக்கு சென்று சுற்றுலா தலங்களைப் பார்வையிடத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் சிங்கள ராணுவ அதிகாரிகள் குன்னூரில் முகாமிட்டிருக்கும் தகவல் தீயாக பரவியது. இதனால் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் குன்னூரில் குவியத் தொடங்கினர். இதனால் சிங்கள ராணுவத்தினரின் ஊட்டி செல்லும் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து குன்னூர் லெவல் கிராஸிங்கில் குவிந்த மதிமுகவினர் சிங்கள ராணுவத்தினரை வெளியேற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 52 மதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
குன்னூரில் சிங்கள ராணுவத்தினர் தொடர்ந்தும் தங்கியிருப்பதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications