பாமக சார்பில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம்!
சென்னை: பாமக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 6,172 மதுக்கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நாளை (ஜூலை 17ம் தேதி) நடைபெற உள்ளது.
இது குறித்துப் பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மதுவின் தீமைகள் பெருகிவிட்டது. இதனால் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுக்கடைகளுக்குப் பூட்டுப்போடும் போராட்டத்தை கடந்த ஜுலை 11ம் தேதி நடத்துவது என பாமக நிர்வாகக்குழு கூட்டத்திலும், செயற்குழு கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் பாமக இளைஞரணி செயலாளர் அறிவுச்செல்வன் சாலை விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு வாரத்திற்கு துக்கம் கடைபிடிக்கப்பட்டது. இதனால் இப்போராட்டம் ஜுலை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 6,172 மதுக்கடைகளுக்கு அடையாள பூட்டுப்போடும் அறவழி போராட்டம் ஜூலை 17ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
சென்னை தியாகராயநகர் தெற்கு போக் சாலையில் ம.பொ.சி. சிலைக்கு எதிரில் உள்ள மதுக்கடைக்கு முன்பு நடைபெறும் போராட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும், காஞ்சீபுரத்தில் பாமக இளைஞரணி செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸும் தலைமை வகிக்கின்றனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.