குடியரசுத் தலைவர் தேர்தல்: திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு கருணாநிதி அறிவுரை
சென்னை அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். சமீப காலமாக திமுகவின் எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த மு.க.அழகிரி இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார். படு உற்சாகமாக காணப்பட்ட அவர் சகஜமான நிலையில் இருந்தார்.
இக்கூட்டத்தில் கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், குடியரசு்த் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கும் கட்சியின் முடிவை நிறைவேற்ற உறுப்பினர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது என்றார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் இன்னாருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கட்சிக் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே இஷ்டத்திற்கு யாருக்கு வேண்டுமானாலும் உறுப்பினர்கள் வாக்களிக்கலாம். இந்த நிலையில்தான் தங்களது கட்சியிலிருந்து யாரும் மாறி ஓட்டுப் போட்டு விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு கட்சியும் தங்களது எம்.பி, எம்.எல்.ஏக்களை அழைத்து அட்வைஸ் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவுக்கு எத்தனை பேர் உள்ளனர்
திமுகவைப் பொறுத்தவரை தமிழகத்தில் குறைவான வாக்குகளே உள்ளன. அதாவது அக்கட்சிக்கு மொத்தம் 25 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் 18 பேர் லோக்சபா உறுப்பினர்கள், 7 பேர் ராஜ்யசபா உறுப்பினர்கள்.
எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை வெறும் 23 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.