குவஹாத்தியில் குடிகார கும்பலால் இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்ட வழக்கில் டிவி நிருபர் கைது
குவஹாத்தி: குடிகார கும்பலால் இளம்பெண் ஒருவர் மானபங்கம் செய்யப்பட்ட வழக்கில் தனியார் தொலைக்காட்சி நிருபர் கெளரவ் ஜோதி நியோக் கைது செய்யப்பட்டுள்ளார்.
குவஹாத்தியில் கடந்த 9-ந் தேதி 20க்கும் மேற்பட்ட குடிகார கும்பல் ஒன்றினால் இளம்பெண் ஒருவர் மானபங்கம் செய்யப்பட்ட காட்சி அசாம் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும் இளம்பெண்ணை மானபங்கம் செய்த கும்பலில் அந்தக் காட்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சியின் நிருபர் கெளரவ் ஜோதியுடம் உடன் இருந்தார் என்றும் அவரது செட்டப்பில்தான் இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டது என்றும் பலரும் புகார் தெரிவித்து வந்தனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் மற்றும் நிருபரிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அவர்கள் உதவி செய்யவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் கெளரவ் ஜோதி தமக்கு முன் ஜாமீன் கோரி குவஹாத்தி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து கெளரவ் ஜோதியை அவரது இல்லம் அருகே போலீசார் கைது செய்தனர்.