கருணாநிதி, வைகோவுக்கு இலங்கை பிரச்சனை ஒரு அரசியல் விளையாட்டு: குமரன் பத்மநாபன்

இந்தோனேஷியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மலேசியாவில் வைத்து இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட கே.பி. இப்போது முழுக்க முழுக்க சிங்கள ஆதரவாளராகிவிட்டார்.
இவர் இலங்கையின் சண்டே அப்சர்வர் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையை இந்த நாடு மட்டுமே தீர்க்க முடியும். வெளிநாடுகளோ அல்லது வெளிநாட்டினரோ இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது.
தமிழர்கள் அவர்களது பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக் கொள்வர். இதில் மூன்றாவது நபரோ நாடுகளோ தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை.
கருணாநிதி மிக மூத்த அரசியல்வாதி. அவருக்கு அரசியல் ஒரு விளையாட்டு. அவருக்கு தமிழ்நாட்டில் பேசுவதற்கு எந்த பிரச்சனையும் இல்லை. இதனால் தான் மீண்டும் டெசோவுக்கு உயிர் கொடுப்பதாகக் கூறிக் கொண்டு ஈழப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். இதன்மூலம் தனது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள முயல்கிறார்.
கருணாநிதிக்கும் ஈழம் குறித்துப் பேசும் மற்ற தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், தமிழக அகதி முகாம்களில் உள்ள தமிழர்கள் குறித்தும், தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது குறித்தும் முதலில் குரல் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சுமார் 1 லட்சம் அகதிகள் 25 வருடங்களாக மிகக் கேவலமான சூழ்நிலையில் வசித்து வருகின்றனர். அவர்களது குழந்தைகளுக்கு படிப்பு இல்லை, பிறப்பு சான்றிதழ் கூட இல்லை.
அதே போல தமிழக மீனவர்கள் எல்லை கடந்து வந்து மீன் பிடிப்பதால் இலங்கைத் தமிழ் மீனவர்களின் பிழைப்பே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்கவும், இலங்கை பகுதிக்குள் மீன் பிடிக்க வேண்டாம் என்று கூறவும் தமிழக அரசியல் தலைவர்கள் முன் வருவார்களா?
இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கையில் எடுப்பதே ஓட்டுக்காகத் தான். ஆனால், இவர்களது அரசியல் அஜென்டாவை புரிந்து கொள்ளாத அப்பாவி மக்கள் தான் இவர்களை நம்புகின்றனர்.
மாறிவிட்ட இப்போதைய சூழ்நிலையில் இலங்கையில் தமிழர்கள் தனி நாட்டை விரும்பவில்லை. அவர்கள் ஒருங்கிணைந்த இலங்கையிலேயே வாழ விரும்புகின்றனர். ஆனால் தனி ஈழம் வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.
தமிழர்களும் சிங்களர்கள் பல நூற்றாண்டுகளாக இணைந்து வாழ்ந்தவர்கள். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட எத்தனையே பிரச்சனைகளை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் தலையீடே இல்லாமல் இரு தரப்பினருமே பேசி தீர்த்துள்ளதற்கு பல வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. அது இப்போதும் சாத்தியமே.
உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால், மலேசியத் தமிழர்கள் தங்களது பிரச்சனைகளில் தமிழக அரசியல்வாதிகளை தலையிடவே விடுவதில்லை. தமிழக பிரச்சனைகளுக்கு இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் ஏதாவது யோசனை சொன்னால் அதை தமிழக அரசியல் தலைவர்கள் ஏற்பார்களா?. அப்படி இருக்கையில், எங்களது பிரச்சனையில் அவர்கள் ஏன் தலையிட வேண்டும்?.
கருணாநிதி நடத்தும் டெசோ மாநாட்டால் வன்னியில் வாழும் தமிழர்களுக்கு எந்த நலனும் ஏற்படப் போவதில்லை.
இலங்கை பிரச்சனை என்பது கருணாநிதி, வைகோ, நெடுமாறன். சீமான் போன்றவர்களுக்கு ஒரு அரசியல் விளையாட்டு. ஓட்டு வங்கிக்காக ஒருவரை ஒருவர் விஞ்ச இந்தப் பிரச்சனையை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.
இலங்கையில் தமிழர்களும் சிங்களர்களும் அடுத்த மொழியான சிங்களத்தையும் தமிழையும் படிக்காமல் விட்டது மிகப் பெரிய தவறு. மொழிகள் மூலம் பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.
வவுனியாவைத் தாண்டி இலங்கையின் பிற பகுதிகளுக்கு வர வேண்டுமானால், வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டுமானால் தமிழர்கள் சிங்களம் கற்க வேண்டும். அதே போல சிங்களர்களும் தமிழ் கற்க வேண்டும்.
ஆனால், இங்கே சிங்களம் கற்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கிறது. இதே கூட்டமைப்பு கனடாவில் தமிழர்கள் பிரஞ்சு மொழி கற்பதை தடுக்குமா?.
நான் தமிழர்களைக் காட்டிக் கொடுத்தவன் என்கிறார் வைகோ. என்னைப் பற்றி குறை கூற அவர் யார்?. நான் தமிழர் நலனுக்காக தமிழ் ஈழத்துக்காக நேரடியாக போராடியவன். ஆனால், நான் தவறு செய்வதாக உணர்ந்ததால் தான் அந்தக் கோரிக்கையை கைவிட்டேன். தனி தமிழ் ஈழத்துக்காக கனவு கண்டோம். ஆனால், அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்ததால் விட்டுவிட்டோம்.
வைகோவின் தலைவரான பெரியார் என்ன சொன்னார்?. தனித் திராவிட நாடு தான் அவரது கொள்கை. இந்தக் கனவை வைகோவும் தானே கண்டார். அந்தக் கனவை ஏன் கைவிட்டார்?. அதே நிலைமை தான் தமிழ் ஈழத்துக்கும் ஏற்பட்டது.
கொரில்லா போர் முறையில் வென்ற ஒரே நாடு கியூபா தான். நாங்கள் நேரடியாக போரில் ஈடுபட்டு அனைத்தையும் இழந்தோம். வைகோவுக்கு அதன் வலி தெரியாது.
இவ்வாறு பேட்டியளித்துள்ள கே.பி. ஒரு நல்ல விஷயத்தையும் கூறியிருக்கிறார்.
அது, நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்பது. நல்ல வேளை!












Click it and Unblock the Notifications