கைவிரித்தது பருவமழை- அணைகள் வறண்டன- குடிநீருக்கும் தட்டுப்பாட்டு ஏற்படும் அபாயம்

வழக்கமாக பெய்யும் பருவமழையில் மூன்றில் ஒரு பங்குதான் இந்த ஆண்டு கிடைத்திருக்கிறது. இதனால் நாட்டின் முக்கிய 84 அணைகளில் 19 அணைகள் மட்டுமே கொள்ளளவை எட்டியிருக்கின்றன. 41 விழுக்காடு அணைகளில் கடந்த ஆண்டைவிட குறைவான நீர் இருப்பு உள்ளது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள்ளது..
வானிலை மாற்றமான எல் நினோவினால் இத்தகைய வறட்சி நிலைமை உருவாவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. எல்-நினோ என்பது 3 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படக்கூடியது. எல்-நினோ ஏற்படும் சமயத்தில் காற்று மேற்கு நோக்கி வீசுவதால் கடல்நீரின் வெப்பம் அதிகரிப்பதோடு மேல்பரப்பில் உள்ள காற்றின் வெப்பமும் அதிகரிக்கும். இதனால் சில இடங்களில் அதிக மழையும் சில இடங்களில் கடும் வறட்சியும் ஏற்படும். அத்தகைய வறட்சியை நோக்கித்தான் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது.
இது தொடர்பாக மத்திய நீர் ஆணைய தலைவர் ஜா கூறுகையில், 2009-ம் ஆண்டில் அணைகள் வறண்டுப்போனதால் 100 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை எதிர்நோக்க நேரிட்டது. இத்தகைய ஒரு நிலைமையானது நாட்டின் வேளாண் துறையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். என்றார்.
மழைக்கான காத்திருப்பு காலம் முடிவடைந்துவிட்டது. இனி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டிய காலம். இதற்காக ஆகஸ்ட் மாதம் வரை காத்திருக்காமல் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று நாட்டின் வேளாண் ஆணையத்தின் தலைவர் அசோக் கூறியுள்ளார்.
ஆனால் நிச்சயமாக எதிர்வரும் வாரங்களில் நிலைமை மேம்படும் என்றும் அணைகள் நிரம்பும் என்றும் வேளாண்துறை செயலாளர் ஆஷிஷ் பகுகுணா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான கால மழையினால்தான் அணைகள் நிரம்பும். பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் பயனடையக் கூடிய பக்ரா அணையில் கடந்த ஆண்டு 48 விழுக்காடு அளவுக்கு இந்த காலகட்டத்தில் நீர் கையிருப்பு இருந்தது. தற்போதோ 22 விழுக்காடு அளவு நீர்தான் கையிருப்பு உள்ளது. தமிழ்நாட்டின் மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு இந்த ஆண்டு நீர் திறந்துவிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications