துணை ஜனாதிபதி தேர்தல்: அதிமுக, மதிமுக, தெலுங்கு தேசத்துக்கு பாஜக வலை
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ஜஸ்வந்த் சிங்குக்கு ஆதரவு கோரி காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் பேச தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது.
இந்தக் கூட்டணித் தலைவர்களின் கூட்டம் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் இல்லத்தில் நடந்தது. அதில், பாஜக தலைவர் நிதின் கட்காரி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், சிரோன்மணி அகாலி தளத் தலைவர் நரேஷ் குஜ்ரால், சிவசேனை எம்பி சஞ்சய் ரௌட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் ஜஸ்வந்த் சிங்கை வெற்றி பெறச் செய்வதற்கான உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கூட்டணி நிறுத்தியபோது, அவருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை ஆகியவை ஆதரவு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது அந்த இரு கட்சிகளும் ஜஸ்வந்த் சிங்கை ஆதரிப்பதால் எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என்பது குறித்து அவர்கள் விவாதித்தனர்.
துணை ஜனாதிபதி தேர்தலில் மக்களவையில் உள்ள 543 எம்பிக்களும், ராஜ்யசபாவில் உள்ள 245 எம்பிக்களும், வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இதில் எம்எல்ஏக்கள் வாக்களிப்பதில்லை.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் உள்ள சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய ஜனதா தளம் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அந்தக் கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்யிடும் ஹமீது அன்சாரிக்கு 450 எம்பிக்களுக்கும் அதிகமானோரின் ஆதரவு உள்ளது.
ஆனால், பாஜக கூட்டணியில் 215 எம்பிக்களே உள்ளனர். இதனால் அதிமுக, பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம், மதிமுக, சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவது என அத்வானி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தல் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications