நாங்குநேரி மணல் கடத்தல் விவகாரம்- விசாரிக்க சென்ற போலீஸ் சுட்டு இளைஞர் பலி
நாங்குநேரி: நாங்குநேரி அருகே செங்கல் சூளைக்காக குளத்தில் இருந்து திருட்டுத் தனமாக மணலை அள்ளிய விவகாரத்தில் விசாரணை நடத்தச் சென்ற போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது மறுகால் குறிச்சி கிராமம். இக்கிராமத்தினர் பெரும்பாலானோர் செங்கல் சூளை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான மண் அருகே உள்ள குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அண்மையில் அக்குளத்து மண் குத்தகைக்கு விடப்பட்டது. இதனால் அக்குளத்தில் இருந்து திருட்டு தனமாக மண் அள்ளுவது தொடர்கதையாகிவந்தது.
இப்படி திருட்டுத்தனமாக மண் அள்ளியது தொடர்பாக மறுகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கூடுதல் விசாரணைக்காக மறுகால்குறிச்சி கிராமத்துக்கு போலீசார் சென்றனர். அங்கு முருகனின் அண்ணன் வானமாமலையிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வானமாமலை மற்றும் அவருடன் இருந்த பொதுமகக்ளுக்கும் போலீசாருக்கும் இடையெ திடீரென மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது இன்ஸ்பெக்டர் விஜயகுமார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே வானமாமலை உயிரிழந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரை சுற்றி வளைக்க முயற்சித்தனர். ஆனால் அங்கிருந்து போலீசார் வெளியேறிவிட்டனர்.
போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வானமாமலையின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.. பின்னர் உதவி ஆட்சியர் ரோகிணியும் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சுமார் 3 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு இரவு 7 மணிக்கு சாலை மறியல்கைவிடப்பட்டது. அதன் பினன்ர் வானமாமலையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
போலீசார் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு குறித்து உதவி ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications