டெசோ மாநாட்டில் பங்கேற்கும் சரத் பவார், பரூக் அப்துல்லா, சரத் யாதவ்
சென்னை: சென்னையில் திமுக நடத்தும் டெசோ மாநாட்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
டெசோ அமைப்பின் சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு மற்றும் ஆய்வரங்கம் ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறுகிறது.
இந்த மாநாட்டுக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். மாநாட்டில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றுகிறார்.
இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், ஜம்மு- காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் சரத் யாதவ், லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், சமாஜவாதி கட்சி பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ் மற்றும்,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் ஆய்வரங்கத்தில் பேசுகின்றனர்.
இவர்கள் தவிர ஒஸிகேனபிபோய் டொனால்டு, அப்துல் ரசாக் மோமோ (நைஜீரியா), நஸீம் மாலிக் (சுவீடன்), டைடா முகமது, அபெகோ முபாரக் (மொராக்கோ), மொல் இஸ்திராம் (துருக்கி), தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த இலங்கை எம்.பி.க்கள் சேனாதி ராஜா, சுமந்திரன், யோகேஸ்வரன், சரவண பவன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார், பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா, கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம், மணிவண்ணன், நவசமா, சமாஜா கட்சி தலைவர் விக்கிரமபகு கர்ணரத்னே மற்றும் இலங்கை, ஆப்பிரிக்கா. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications