ஓட்டை பஸ்சுக்கு எப்சி கொடுத்தது எப்படி?- ஆர்டிஓ அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 2வது வகுப்பு படித்து வந்த சேலையூர் ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தாள். இதில் பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி மிகக் கொடுமையான முறையில் உயிரிழந்தாள்.
இந்த சம்பவம் மக்களிடையே கடும் கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலையே சம்பந்தப்பட்ட பள்ளிப் பேருந்தை மக்கள் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இன்று வழக்காக எடுத்துக் கொண்டது. இன்று காலை நீதிமன்றம் கூடியதும் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தார்.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நேரில் ஆஜரானார். அவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 20 நாட்களுக்கு முன்புதான் அந்தப் பேருந்துக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் எப்சி கொடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இப்படிப்பட்ட பெரிய ஓட்டை உள்ள பேருந்துக்கு எப்படி எப்சி அளித்தார்கள். யார் இதைக் கொடுத்தது. இதற்குப் பொறுப்பான அத்தனை ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளும் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு நாளைக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
தெரிவித்தார். 20 நா்களுக்கு முன்புதான் அஏநுமதி தந்துள்ளார்கள் என்று கூறிய நீதிபதி, எப்படி கொடுத்தனர் என்று கேட்டார். பொறுப்பான அனைவரும் நாளை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் தர உத்தரவிட்டார்.
இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் யார் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் கமுக்கமாக உள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் உயர்நீதிமன்றமே இதை தானாக முன்வந்து விசாரிக்க ஆரம்பித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications