ஏன் உங்கள் பள்ளியை மூட உத்தரவிடக் கூடாது?... ஜியோன் பள்ளிக்கு அரசு நோட்டீஸ்
இதனால் இப்பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு பள்ளிக்கூடம் மூடப்படுமா என்ற அச்சம் மாணவ, மாணவியர், பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மெட்ரிக் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம், சேலையூரில் இயங்கிவரும் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இருந்து நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் முடிந்து மாணவர்கள் திரும்ப வீட்டுக்கு அழைத்து செல்லும்போது, முடிச்சூர் அருகே டி.என்.23 எஸ் 9952 என்ற எண் கொண்ட பள்ளியின் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த பேருந்தின் மையப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக 2-வது வகுப்பு படிக்கும் சிறுமி இ.எஸ்.சுருதி தவறி விழுந்து பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு, சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்களிடமும், பின்னர் பள்ளி நிர்வாகியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் நிர்வாகத்தால், உறுதி மொழி அளிக்கப்பட்டதற்கு புறம்பாக பாதுகாப்பற்ற நிலையில் செயல்பட்டு வந்ததாக, தெரியவருகிறது.
இவ்வாறு மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வந்துள்ள இந்தப்பள்ளிக்கூடத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகார ஆணையில் தெரிவிக்கப்பட்ட நெறிமுறைகளையும், நிபந்தனைகளையும் பின்பற்றாமைக்கும், மெட்ரிக் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் விதித்தொகுப்பு விதி எண் 10 (3)-ன்படி பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளை பொறுப்பற்ற முறையிலும் பாதுகாப்பு இல்லாமல் இருந்த பேருந்தில் பயணம் செய்ய அனுமதித்தற்கும் இதனால், இரண்டாம் வகுப்பு படித்த சிறுமி இ.எஸ்.சுருதி உயிரிழக்க காரணமாக இருந்ததற்கும், பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகள் மிகுந்த கண்டனத்துக்கு உரியது .
எனவே, முத்ல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், அரசின் நடைமுறை விதிகளை பின்பற்றாத இந்தப்பள்ளிக்கூடத்தை தொடர்ந்து நடத்தாமல் ஏன் மூடக்கூடாது? என்பதற்கான காரணம் கேட்கும் அறிவிக்கை பள்ளிக்கூடத்தின் தாளாளர் மற்றும் நிர்வாகிக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜியோன் பள்ளி தற்காலிகமாக சீல் வைக்கப்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.