அமைச்சரவையில் ராகுல் இடம்பெற திக்விஜய்சிங் எதிர்ப்பு
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி முக்கியப் பொறுப்பு வகிக்கட்டும்..ஆனால் அமைச்சரவையில் அவர் சேரக் கூடாது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி முக்கியப் பொறுப்பு வகிக்க வேண்டும். எதிர்வரும் 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியைத் தயார்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள வேண்டும். அதனால் அவர் அமைச்சரவையில் சேருவதை நான் விரும்பவிலை.
நாட்டின் 60 விழுக்காடு வாக்காளர்கள் 35 வயதுக்கு கீழே இருப்பவர்கள்தான். எனக்கு இப்பொழுது 65 வயதாகிறது. அதனால் குறிப்பிட்ட காலத்தில் என்னைப் போன்றவர்கள் ஓய்வெடுத்துக் கொள்ல வேண்டும்.
ராகுல்காந்தியால் காங்கிரசுக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்க முடிந்தது. ஆனால் அதை வாக்குகளாக மாற்ற அவரால் முடியாமல் போய்விட்டது. ராகுல்காந்தியைப் பொறுத்தவரை உத்தரப்பிரதேசம் அவரது சொந்த மாநிலம். அவர் அங்கிருந்துதான் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதற்காக அவரை உத்தரப்பிரதேச முதல்வராக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அவரை ஒரு தேசியத் தலைவராகவே பார்க்கிறோம்.
பாபா ராம்தேவ் ஒரு ரவுடியைப் போல் செயல்படுகிறார்.அவர் மற்றவர்களின் கருப்புப் பணத்தைப் பற்றி பேசுகிறார். முதலில் அவரிடம் இருக்கும் கருப்புப் பணத்தை வெளியே எடுக்கச் சொல்லுங்கள். பிரபல யோகா குரு பிகேஎஸ் அய்யங்கார், ராம்தேவ்க்கு யோகாவே தெரியாது என கூறியிருக்கிறார் என்றார் திக்விஜய்சிங்.












Click it and Unblock the Notifications