காங்கிரஸ் கட்சி யானை அல்ல, அது ஒரு குதிரை: சொல்கிறார் ஞானதேசிகன்
மதுரை: காங்கிரஸ் கட்சி யானை அல்ல. அது ஒரு குதிரை என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஞானதேசிகன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அழைப்பு விடுக்கும் வகையில், மதுரையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஞானதேசிகன் எம்.பி. செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
மதுரையில் நடைபெற உள்ள காமராஜர் பிறந்தநாள் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் பங்கேற்கின்றனர். தமிழக சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்தது.
அதை கணக்கில் வைத்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று சிலர் கனவு காண்கின்றனர். அது பகல் கனவு தானே தவிர உண்மை அல்ல. காங்கிரஸ் கட்சி யானை அல்ல, குதிரை. அதனால் கீழே விழுந்தால் உடனே எழுந்து நிற்கும் என்பதை பல நேரங்களில் மக்களிடம் நிரூபித்து காட்டி உள்ளோம்.
யானையின் பலமும், குதிரையின் வேகமும் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு என்பதைக் காட்டும் விழாவாக காமராஜர் பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெறும். தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச கல்வி, மதிய உணவு, சீருடை, கல்வி கடன் ஆகியவற்றை கொடுத்தவர் காமராஜர்.
தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வருவதற்கு காரணாக இருந்தவர் காமராஜர். பல அரசியல் தலைவர்களை உருவாக்கியவர் காமராஜர். அவரது காலம் தான் தமிழகத்தின் பொற்காலமாக இருந்தது. இந்த பொற்காலம் மீண்டும் வராதா என்று ஏங்கும் தொண்டர்களை சங்கமிக்கும் விழாவாக இது இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications