வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் காலூன்றுவதன் பின்னணியில் சீனா?
இடா நகர்: வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் காலூன்ற சீனா உதவி வருவதாக அருணாசலப் பிரதேசத்தில் அண்மையில் கைது செய்ய மூன்று மாவோயிஸ்ட் இயக்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.
அசாமில் அண்மையில் சில மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை வைத்து அருணாசலப் பிரதேசத்தில் சில நாட்களுக்கு முன்பு அசாம் ரைபிள்ஸ் படையினரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினரும் தீவிர தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டனர். அப்போது நிபெஞ்யோதி செதியா, டோடோங் நியோக் மற்றும் ஜிந்து செதாய் ஆகிய மூன்று மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது மாவோயிஸ்டுகள் வடகிழக்கு மாநிலத்தில் காலூன்றுவதற்கு நிதி உதவி மற்றும் ஆயுதங்களை சீனா வழங்குவதுடன் ஆயுதப் பயிற்சிகளையும் சீனா, மியான்மர் எல்லையோரத்தில் வழங்கி வருகிறது எனவும் கூறியுள்ளனர்.
மேலும் இந்த 3 பேரிடமும் 7 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டு அவை தடவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சிம் கார்டுகள் மூலம் கூடுதல் தகவல் ஏதும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் மூவருக்கும் கம்தாபூர் விடுதலை முன்னணி என்ற வடகிழக்கு மாநில தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருந்ததும் தெரியவந்துள்ளது. இதேபோல் வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டு அமைப்புக்கு தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் சிலருக்கு சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் வனப்பகுதியில் பயிற்சி கொடுப்பதும் அம்பலமாகியுள்ளது