கொலையாளிகளுக்கு உதவி.. 87 போலீசார் டிரான்ஸ்பருக்கு லஞ்சம்: எஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

மேலும் அவருக்குக் கீழ் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனைகளில் 2.5 கிலோ தங்க நகைகள், 392 கிராம் தங்க நாணயங்கள், ரூ. 10 லட்சம் பணம், 15 கிலோ வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டன.
தமிழக கவர்னருக்கு சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய அபிஷேக் தீக்ஷித் கடந்த 24.12.2011 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பியானார். கடந்த மாதம் சென்னை கமாண்டோ பிரிவுக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.
தான் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு சில நாட்களுக்கு முன் அபிஷேக் தீக்ஷித் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 87 போலீசாருக்கு டிரான்ஸ்பர் உத்தரவுகளை அள்ளித் தந்தார். மேலும் துறைரீதியாக நடவடிக்கைக்கு உள்ளான 45 போலீசார் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்தார்.
இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதற்கு போக்குவரத்து பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த ராமச்சந்திரன் இடைத்தரகர்போல் செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந் நிலையில் அபிஷேக் தீக்ஷித் சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி சென்று விட்டார். ஆனால் கிருஷ்ணகிரியில் அவர் தங்கியிருந்த எஸ்பிக்கான பங்களாவை இன்னும் காலி செய்யவில்லை.
அதே போல ராமச்சந்திரன் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டார்.
இந்தநிலையில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் எஸ்பி செந்தில்வேலன் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பங்களாவிற்கு வந்தனர். அந்த பங்களாவில் சோதனை நடத்தினர்.
அதே நேரத்தில் அபிஷேக் தீக்ஷித்துக்கு உதவியாக இடைத் தரகராக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனின் வீடு, மற்றும் அபிஷேக் தீக்ஷித்தின் சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது உறவினர்களின் 3 வீடுகள் உள்பட மொத்தம் 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கான்பூரில் உள்ள வீட்டில் நடந்த சோதனையில் சில முக்கிய சொத்து ஆவணங்களும் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ராமச்சந்திரனின் வீட்டில் மற்றொரு பகுதியில் நகைக்கடை நடத்தப்பட்டு வருகிறது. அதற்காக வாங்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் என கூறப்பட்டாலும், அதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் போலீசார் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.
கடந்த மாதம் 5ம் தேதி ஓசூர் அருகே பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் பழனி துப்பாக்கியால் சுட்டும், தலை துண்டித்தும் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அப்போது எஸ்பியாக இருந்த அபிஷேக் தீக்ஷித் கொலையாளிகளை பிடிக்க 12 தனிப் படைகளை அமைத்தார்.
ஆனால், குற்றவாளிகளை கைது செய்வதில் போலீசார் தீவிரமாக செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் கைமாறி இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
மேலும் தனது பிறந்த தினத்தன்று மாவட்ட போலீஸாரிடம் இருந்தும் பொது மக்கள், ரவுடிகளிடம் இருந்தும் தங்க நாணயங்களை கட்டாயப்படுத்தி வசூலித்துள்ளார்.
இதையடுத்தே லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications