தொடரும் மாணவர் பலி : ஷேர் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து 2-ம் வகுப்பு மாணவி மரணம்
மதுரை: மதுரை அருகே ஷேர் ஆட்டோவில் பள்ளிக்க சென்ற 2-ம் வகுப்பு மாணவி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தாள். அளவிற்கு அதிகமான மாணவர்களை ஏற்றியதே மாணவியின் மரணத்திற்கு காரணம் என்று பெற்றோர்களும், உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டம் சின்ன வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் காட்டுராஜா. இவரது மகள் ஜெயலட்சுமி (வயது 8). கருமாத்தூரில் உள்ள கிளாரட் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். இவர் கார்த்திகை பாண்டி என்பவரது ஷேர் ஆட்டோவில் தினமும் பள்ளி சென்று வருவது வழக்கம். வெள்ளிக்கிழமையன்று காலையில் பள்ளிக்கு சென்ற மாணவி மாலை 5 மணிக்கு பள்ளி முடிந்தவுடன் ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பினாள்.
ஆட்டோவில் அனுமதிக்கப்பட்டதை காட்டிலும் அதிகளவில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக்கொண்டு டிரைவர் வேகமாக ஓட்டி வந்துள்ளார். இதனால் ஆட்டோவில் நெரிசலில் சிக்கி தவித்த மாணவி ஜெயலட்சுமி திடீரென ஆட்டோவில் இருந்து தவறி விழுந்தாள். இதில் அதே ஆட்டோவின் சக்கரம் மாணவியின் தலையில் ஏறி இறங்கியது. இதனால் ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.
பள்ளி சென்ற மாணவி பிணமாக கிடப்பதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். விபத்து குறித்து சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கார்த்திகை பாண்டியை கைது செய்தனர். பெற்றோர்களும் கட்டணம் குறையும் என்பதற்காக அதிகமான குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் தங்கள் குழந்தைகளை அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தாம்பரம் ஸ்ருதி தொடங்கி சின்னவாகைக்குளம் ஜெயலட்சுமி வரை கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் பள்ளி மாணவ, மாணவிகள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. பள்ளி, ஷேர் ஆட்டோ என மாநிலம் முழுவதும் போலீசார் சோதனைகள் நடத்தினாலும், பொறுப்பில்லாமல் ஆட்டோவில் அதிகளவில் குழந்தைகளை ஏற்றி சென்று விபத்துக்களை ஏற்படுத்தும் அவலநிலை மேலும் தொடரத்தான் செய்கிறது.












Click it and Unblock the Notifications