சட்டசபையில் ஜெயலலிதாவை புகழவே அமைச்சர்களுக்கு நேரம்போதவில்லை: விஜயகாந்த் தாக்கு

கோவில்பட்டியில் மாவட்ட தேமுதிக சார்பில் பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் விஜயகாந்த் பேசியதாவது,
மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க இன்றைய ஆளும் கட்சி முன்வரவில்லை. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தாமிரபரணி ஆற்று தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். ஆனால் அங்குள்ள மக்களுக்கு தண்ணீர் மறுக்கப்படுகிறது. தற்போது வீட்டிற்கு மாத வாடகை ரூ.3,000 என்றால், மின்சார கட்டணமாக ரூ.3,000 கட்ட வேண்டியுள்ளது. மின்தடையால் தமிழகமே இருளில் மூழ்கி தவிக்கிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்து 6 மாதமாகியும் அந்த தொகுதியில் எவ்வித திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
ஆசிரியர்கள் 77 பேர் ஆதி திராவிட மாணவர்களின் கல்வி உதவித்தொகை பணத்தை சுருட்டி உள்ளனர். இவ்வாறு தவறு செய்த ஆசிரியர்களை வெறும் சஸ்பெண்ட் மட்டுமே செய்யாமல், அவர்களிடம் இருந்து மோசடி பணத்தை திரும்பப் பெற்று தண்டனை வழங்க வேண்டும். தொடர் மின்தடை மற்றும் மின்கட்டண உயர்வால் விறகு அடுப்புகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் சிரமப்படுகின்றனர். சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் விளாத்திகுளம் பகுதியில் தார்சாலைகளை காணாத கிராமங்கள் நிறைய உள்ளன.
கோவில்பட்டியில் ஒவ்வொரு ஆட்சியின்போதும் இரண்டாவது பைப் லைன் திட்டம் நிறைவேற்றப்படும் என கூறப்படுவதோடு சரி. ஆனால் இத்திட்டம் இதுவரை நிறைவேறியபாடில்லை. சட்டசபையில் முதல்வரை புகழ்வதிலேயே அமைச்சர்கள் குறியாய் உள்ளனர். அதிமுக ஆட்சியில் தினமும் ஒரு அறிக்கை விடுகின்றனர். ஆனால் இதில் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றினார்களா என்றால் இல்லை.
அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. காவல் துறையினரே எங்கு கொள்ளையடிக்கலாம் என ஏவிவிடும் நிலை உள்ளது. காவல்துறையினர் எங்களை சீண்டினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். ஜெயலலிதா மேடைகளில் பேச வரும்போது எத்தனை போலீஸ் பாதுகாப்பு. ஆனால் இங்கு பாருங்கள் ஒரு போலீஸ்காரராவது இருக்கிறாரா, வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒரு வடிகாலாக நினைக்கின்றனர். அதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஏமாறாமல் எச்சரிக்கையுடன் வாக்களியுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications