உடம்பு நாறுவதாக சொன்ன சர்வர் பெண்... போலீஸிடம் போன பாட்டி!
லண்டன்: தனது உடம்பு நாறுவதாக சர்வர் பெண் சொன்னதால் கோபமடைந்த 61 வயது பாட்டி, போலீஸில் புகார் செய்தார். இதனால் அந்த ஹோட்டலில் பரபரப்பாகி விட்டது.
லண்டனைச் சேர்ந்தவர் ஜூன் மாரிஸ். 61 வயதாகிறது. இந்தப் பாட்டி அங்குள்ள ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனார். அப்போது அவரைக் கடந்து சென்ற சர்வர் பெண், பாட்டி உடம்பு நாறுவதாக இன்னொருவரிடம் கூறியபடி கடந்து சென்றார். இதைக் கேட்டு பாட்டி கடுப்பாகி விட்டார்.
அந்தப் பெண் திரும்பி வந்தபோது தடுத்து நிறுத்திய பாட்டி, ஏன் என் உடம்பு நாறுவதாக சொன்னாய் என்று கேட்டார். அதற்கு அந்த சர்வர் பெண், ஆமாம் பாட்டி உங்கள் உடம்பிலிருந்து வாடை வருகிறது என்று மறுபடியும் கூறியுள்ளார். இதைக் கேட்டு பாட்டிக்கு மேலும் கோபமாகி விட்டது.
இதையடுத்து ஹோட்டல் மேனேஜரிடம் போய் புகார் கூறினார். அதைக்கேட்ட மேனேஜர், அந்தப் பெண் சாதாரணமான முறையில் கேலி செய்வது போலத்தான் கூறியுள்ளார். எனவே இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் பாட்டி விடவில்லை. போலீஸாரைக் கூப்பிட்டு விட்டார்.
போலீஸார் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் மேலாளர் பாட்டியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இந்த விவகாரம் குறித்து பாட்டி ஜூன் மாரிஸ் கூறுகையில், இது என்னை அவமானப்படுத்திய பேச்சாகும். எனது உடம்பை நான் மிக மிக சுத்தமாக பராமரித்து வருகிறேன். எனது தாயும், தந்தையும், என் உடலை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி வந்துள்ளனர். அதை நான் இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன். இப்படிப்பட்ட நிலையில் என்னை எப்படி சுத்தமில்லாதவள் என்று அந்தப் பெண் சொல்லலாம் என்றார் கோபமாக.












Click it and Unblock the Notifications