முன்னாள் ஹரியானா துணை முதல்வரின் 2வது மனைவி மர்ம சாவு
முன்னாள் அட்வகேட் ஜெனரல் அனுராதா பாலி. அவர் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய ஹரியானா துணை முதல்வர் சந்தர் மோகனை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான சந்தர் மோகன் அனுராதாவை மணக்க இஸ்லாத்திற்கு மாறி தனது பெயரை சந்த் முகம்மது என்று மாற்றிக் கொண்டதால் அவரை மணப்பதற்காக அனுராதாவும் முஸ்லிமாக மாறி தனது பெயரை பாயிசா முகம்மது என்று மாற்றிக் கொண்டார்.
திருமணம் முடிந்த அடுத்த ஆண்டே அதாவது 2009ம் ஆண்டே சந்தர் மோகன் பாயிசாவை விட்டுவிட்டு மீண்டும் தனது முதல் மனைவியிடம் சென்றதோடு மீண்டும் இந்து மதத்திற்கு மாறிவிட்டார். அவரை கடத்திச் சென்றுவிட்டதாக பாயிசா தெரிவித்தார். ஆனால் தன் சொந்த வி்ருப்பத்தின்பேரில் தான் சென்றதாக சந்தர் மோகன் தெரிவித்தார். இந்த பிரச்சனையால் மோகனின் பதவி பறிபோனது.
தொடர்ந்து சந்தர் மோகன் பாயிசாவுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் 3 முறை தலாக் என்று அனுப்பி வைத்தார். இதையடுத்து பாயிசா தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை காப்பாற்றிவி்டடனர். அதன் பிறகு அவர் மொகாலியில் உள்ள தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். அரசியல் மற்றும் சினிமாவில் பிரகாசிக்க முயன்ற பாயிசாவுக்கு தோல்வி தான் மிஞ்சியது. இந்நிலையில் அவரது வீட்டில் அவர் தூக்கில் பிணமாகத் தொங்கியது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் அழுகிய நிலையில் உள்ளது. அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சந்தர் மோகன் முன்னாள் ஹரியானா முதல்வர் பஜன் லாலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.