மதுரைக்கு மர்ம வெடிகுண்டு பார்சலுக்கும் புனே குண்டுவெடிப்புக்கும் தொடர்பா?: போலீஸ் தீவிர விசாரணை
மதுரை: மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் மர்ம வெடிகுண்டு பார்வலை கொடுத்தது யார்? எதற்காக அந்த வெடிகுண்டு பார்சல் அனுப்பி வைக்கப்பட்டது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரண நடத்தி வருகின்றனர்.
மதுரை புதுராமநாதபுரம் சாலையைச் சேர்ந்த உமர் பரூக் என்பவரிடம் இளைஞர் ஒருவர் கடந்த 3-ந் தேதி மர்ம பார்சல் ஒன்றை கொடுத்துவிட்டு அருகில் உள்ள நகைப் பட்டறைக்காரரான ஆறுமுகத்திடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அந்த பார்சலை உமர் பரூக் திறந்து பார்த்த போது அதில் வெடிகுண்டு இருந்தது தெரியவந்தது. இத்தகவல் உடனே போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் விரைந்து சென்று வெடிகுண்டு பார்சலை கைப்பற்றி செயல் இழக்கச் செய்தனர்.
மதுரையில் வெடிகுண்டு பிடிபட்ட அதே நேரத்தில் அகில இந்திய சவுராஷ்டிரா சங்க மாநாடு நடைபெறுவதாக இருந்தது. அதில் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட போதும் அதற்கு சில நாட்களுக்கு முன்பே அவர் மதுரை நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார். இதனால் மதுரை வெடிகுண்டு பார்சல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து வெடிகுண்டு பார்சலை கொடுத்த நபர் பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உமர்பரூக் கொடுத்த தகவலின் அடிப்படையில் மர்ம மனிதனின் உருவப்படத்தை கணிணியில் வரைந்து அதை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
மதுரையில் நாசவேலைகளுக்காக வெடிகுண்டு பார்சல் அனுப்பி வைக்கப்பட்டதா? அல்லது உமர் பரூக்கின் தொழில் போட்டியாளர்கள் இந்த வெடிகுண்டு பார்சலை அனுப்பி வைத்தனரா? என்பது குறித்து பல தரப்பினரிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.