அதிமுக அரசை அகற்ற போராட வேண்டியதில்லை, தானாய் போய்விடும்: விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நேற்று இரவு நடந்தது. அப்போது ரூ.20 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை விஜயகாந்த் வழங்கினார்.
அதன் பிறகு அவர் பேசியதாவது,
பத்திரிக்கைகளில் வரும் செய்திகளைப் பார்த்து அதன் அடிப்படையில் அதிமுக அரசை நான் குறை கூறுகிறேன். அதனால் எனக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். அதைக் கண்டு நான் ஒன்றும் அஞ்சமாட்டேன். அந்த வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன்.
அவர்கள் தவறே செய்யவில்லை என்கிறார்களே. உண்மையாகவே அவர்கள் தவறு செய்யவில்லை என்றால் கடந்த முறை நடந்த தேர்தலில் அவர்களுக்கு மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை? முந்தைய ஆட்சியில் இருந்தவர்களும் தவறு செய்தனர். தற்போதுள்ளவர்களும் தவறு செய்கின்றனர். அதிமுகவால் தான் தேமுதிக வென்றது என்கிறார்கள். ஆனால் அதிமுக வெற்றி பெற்றதற்கு தேமுதிக தான் காரணம்.
வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணி வற்றிவிட்டது. இதற்கு அங்கு நடக்கும் மணல் கொள்ளையே காரணம். தமிழக ஆறுகளில் மணல் அள்ளக் கூடாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும். உடன்குடி மின் திட்டம் தனது நேரடிப் பார்வையில் நடப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால் அங்கு எந்த பணியும் நடைபெற்றபாடில்லை. இதை எல்லாம் நான் சொல்வது தவறு என்று வழக்கு போடுகிறார்கள்.
கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்கிவிட்டு எதையும் செய்து கொள்ளுங்கள். மதுரையில் கிரானைட் கொள்ளை தொடர்பாக முன்பே ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை? மாணவர்களின் பணத்தை கையாடல் செய்த பள்ளி தலைமை ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது. அவர்கள் சம்பாதித்த பணத்தை எல்லாம் பறிக்க வேண்டும்.
எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் லஞ்சம், ஊழல் இருக்காது. ரேஷன் பொருட்கள் உங்கள் வீடு தேடி வரும். திமுக ஆட்சியை அகற்ற போராடியது போன்று அதிமுக ஆட்சியை அகற்ற போராட வேண்டியதில்லை. அதுவாகவே போய்விடும். அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் தேமுதிகவுக்கு வந்துவிடுகிறேன் என்றார். பாதியில் வர வேண்டாம் என்று நான் தான் அவரைத் தடுத்து வைத்துள்ளேன். பாதியில் கட்சி மாறுபவர்களை நான் நம்புவதில்லை என்றார்.