சென்னையில் டெசோ மாநாட்டுக்கு தடை கோரி ஆம்புலன்ஸ் டிரைவர் வழக்கு!
சென்னை: டெசோ மாநாட்டை சென்னை மாநகரத்துக்குள் நடத்த தடை விதிக்க கோரி ஆம்புலன்ஸ் டிரைவர் சங்கத்தின் நிர்வாகி ராமசந்திரன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 12ம் தேதி டெசோ மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாடு நடத்தப்பட்டால், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். இந்த மாநாட்டை நடத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர் பொதுநல வழக்குக் தொடர்ந்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி எம்.ஓய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் முன்பு பாலசுப்ரமணியன் ஆஜராகி கோரிக்கை விடுத்தார்.
ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காகக் கருதி உடனடியாக விசாரிக்கத் தேவையில்லை என்று தலைமை நீதிபதி இக்பால் கூறிவிட்டார்.
ஆம்புலன்ஸ் டிரைவர் சங்கம் போட்ட புது வழக்கு:
இந் நிலையில் டெசோ மாநாட்டை சென்னை மாநகரத்துக்குள் நடத்த தடை விதிக்க கோரி ஆம்புலன்ஸ் டிரைவர் சங்கத்தின் நிர்வாகி ராமசந்திரன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சென்னை மாநகரில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணாசாலை வழியாக செல்லும் வாகனங்கள் எல்லாம் ராயபேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம் அமைந்துள்ள பகுதி வழியாகத்தான் திருப்பி விடப்படுகின்றன.
இந்த மைதானத்தில் டெசோ மாநாடு நடத்தப்பட்டால், பொதுமக்கள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே டெசோ மாநாட்டை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்த அனுமதிக்க கூடாது, சென்னை மாநகருக்கு வெளியே மாநாட்டை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.