புது கட்சி தொடங்க கொளத்தூர் மணி நாளை ஆலோசனை!
ஈரோடு: பெரியார் திராவிடர் கழகத்தில் பிளவு ஏற்பட்டதை அடுத்து, புதிய கட்சியை துவங்கி பெயர் சூட்ட கொளத்தூர் மணி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நாளை ஈரோட்டில் நடைபெற உள்ளது.
இது குறித்து பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
நமது கழகத்துக்குள் தோழர் ராமக்கிருஷ்ணன் அணியினருக்கும், நமக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் குறித்து 07.07.2012 அன்று சென்னையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுவில் விரிவாகவே விவாதித்தோம்.
பெரியார் கொள்கைகளை முன்னெடுப்பதில் கழகத்தில் நாம் சந்திக்க வேண்டியிருந்த முட்டுக்கட்டைகள், எதிர்ப்புகள் குறித்து விளக்கினோம். ஒன்றுபட்ட இயக்கத்தில் செயல்படாமல் முடங்குவதைவிட, பிரிந்து நின்று செயல்படுவதே சிறந்தது என்பதையும் கூறினோம்.
இது குறித்து செயற்குழுவில் கருத்து தெரிவித்த உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் (82க்கு 56 பேர்) பிரிந்து செயல்படுவதே நல்லது என்று கூறிய நிலையில் கூட, நாம் ஒற்றுமை வாய்ப்புக்கான கதவுகளை மூடிவிட விரும்பாமல் மீண்டும் திறந்த மனதுடனே ஒற்றுமைக்கான முயற்சிகளை மேற்கொண்டோம்.
ஆனால் இந்த முயற்சிகள் நடைபெற்ற போதே, தோழர் இராமக்கிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டவும், ஒன்றுபடுதல் நிகழ்ந்துவிடக் கூடாது என்று தடுத்து நிறுத்துமளவுக்குத் தனி நபர்களை இழிவுபடுத்தும் அறிக்கைகளை தோழர்களிடம் பரப்பினர்.
இணைந்து செயல்பட முடியாமல் பிரிந்து போகும் நிலையிலும், ஏனைய கட்சிகள் மற்றும் அமைப்புகளில் நடப்பது போல், இவர் அவரை நீக்கினார், அவர் இவரை நீக்கினார்" என்பது போன்ற இழிநிலைகள் பெரியார் இயக்கத்தில் நாம் வழி நடத்திய காலத்தில் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற உண்மையான கவலையோடு அவற்றை தகர்த்துவிடவே விரும்பினோம்.
எனவே, பெரும்பான்மை ஆதரவு நமக்கு இருந்தும், கழகத்தின் பெயரை நாம் தொடர்ந்து பயன்படுத்த வாய்ப்பு இருந்தும், நாகரிகமாக பிரிந்து விடலாம் என்ற கருதி, பெரியார் திராவிடர் கழகத்தின் பெயரை, எவர் ஒருவரும் பயன்படுத்த வேண்டாம் என்ற கருத்தை தலைமை நிர்வாக குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களான நாம் முன் வைத்துள்ளோம்.
பெரியார் இயக்கத்தின் மதிப்பு, மாண்பை காக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களும் இதை ஏற்று செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். செயல்பட வேண்டும். அதே நேரத்தில் நாமும் அமைப்புக்கு புதிய பெயர் வைத்துக் கொண்டு, கொள்கைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தலாம் என்று கருதினோம். தோழர்களிடம் இதைக் கூறினோம். நமது தோழர்களும் இத்தகை பண்பான அணுகுமுறை தான் நமக்குச் சரியானது என்று ஆதரவு தெரிவித்தனர்.
இது குறித்து நாம் இறுதி முடிவெடுக்கவும், நமது தோழர்களுடன் கலந்து பேசவும் எதிர்வரும் 12.08.2012 அன்று ஈரோட்டில் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளோம். இதை ஏற்க கூடிய நமது தோழர்கள் அனைவரும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பங்கேற்றுக் கருத்துக்களை கூற உரிமையுடன் அழைக்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications