நாடாளுமன்றம் நோக்கி பேரணி: பாபா ராம்தேவ், ஆதரவாளர்கள் கூண்டோடு கைது
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கவும், ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை விரைவில் நிறைவேற்றக் கோரியும் யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த 9ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கும் இந்த உண்ணாவிரதத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபடப்போவதாக ராம்தேவ் இன்று காலை அறிவித்தார். அதன்படி சற்று நேரத்திற்கு முன் ராம்லீலா மைதானத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் ராம்தேவ் நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டார். ஆனால் அவர்களின் ஊர்வலம் ரஞ்சித் சிங் மேம்பாலத்தை அடைந்தபோது டெல்லி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கூண்டோடு கைது செய்தனர். அவர்கள் அனைவரும் பேருந்துகள் மூலம் பவானாவில் உள்ள ராஜீவ் காந்தி அரங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
இது தவிர டெல்லிக்குள் நுழைய முயன்ற ராம்தேவின் ஆதரவாளர்கள் சுமார் 20,000 பேர் தலைநகர் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ராம்தேவின் போராட்டத்திற்கு பாஜக, ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம், சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.