நான் காணும் கனவு (தமிழீழம்) நிறைவேறும் வரை போராடுவேன்: கருணாநிதி
சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் கருணாநிதி பேசியதாவது:
வீரவணக்கம்
ஈழத்தமிழர்களின் இனிய விடியலை காண்பதற்காக களத்தில் நின்றும், தியாக வேள்விகள் புரிந்தும், உயிருற்ற கல்லறைகளாக மாறிவிட்ட மாவீரர்களாம் தியாக தங்கங்களுக்கு என் வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இந்தியாவுக்கு அழுத்தம்
நாம் இந்தியாவை வலியுறுத்த வேண்டும் என்று காலையில் பேசியவர்களும், வெளிநாட்டில் இருந்து வந்தோரும் எடுத்துரைத்தனர்.. இந்திய அரசுக்கு அழுத்தத்தைத் தர வேண்டும் என்று திருமாவளவன் பலமுறை இங்கே வலியுறுத்தினார். இலங்கையில் அமைதியும், சமத்துவமும் நிலவுவதற்கான பணிகளை செய்யும் பொறுப்பு இந்தியாவிற்கு உண்டு. பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், மொழிகளை உள்ளடக்கி ஜனநாயக மரபுகளை பாதுகாத்து வரும் இந்திய அரசு, அண்டை நாடான இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகளை கண்டும் காணாமல் இருப்பது ஏனென்ற கேள்வி தமிழர்கள் மனதில் எழுந்துள்ளது என்பதை இம்மாநாடு இந்திய அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது.
தங்களது தீர்வை தாங்களே தீர்மானிப்பது..
ஈழத்தமிழ் மக்கள் அரசியல் பொருளாரம், பண்பாட்டு உரிமைகளை பெற்றெடுத்து சமத்துவம், அமைதியும் நிறைந்த வாழ்வை மேற்கொள்ள இந்திய அரசு முழுமூச்சோடு செயல்பட வேண்டும்.மேலும் இலங்கையில் உள்ள தமிழர்கள், தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்க இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது. இதைவிட இந்திய அரசுக்கு வேறு என்ன அழுத்தத்தை கொடுக்க முடியும்?
ஒரே ஈழநாடுதான் தீர்வு என்று கேட்டீர்களேயானால், அவர்களுக்கு சொல்லுகின்ற ஒரேயொரு சமாதானம் - முதலில் காயம்பட்டுக் கிடப்போரை, ரணத்தை, காயத்தை ஆற்ற அவர்களை உயிர் பிழைக்க முதலுதவி தேவைப்படுவதைப் போல, டெசோ மாநாட்டின் மூலமாக தேவையான முதலுதவிகளை எல்லாம் இலங்கை தமிழர்களுக்கு நாம் செய்ய வேண்டும். நாம் அவற்றை செய்யத் தொடங்கி இருக்கின்றோம். அதைத் தொடர்ந்து நான் அடிக்கடி சொல்வதைப்போல, என்னுடைய வாழ்நாளில் நான் கண்டு கொண்டு இருக்கின்ற, நிறைவேறாத கனவு, அந்த கனவு நிறைவேறுகின்ற வரையில் உங்களை எல்லாம் அரவணைத்துக்கொண்டு போராடுவேன். நிச்சயமாக போராடுவேன் என்றார்.