ஈரானில் நிலநடுக்கத்தினால் பாதிப்பு: உதவிக்கரம் நீட்ட அமெரிக்கா விருப்பம்
வாஷிங்டன்: ஈரானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 250 பேர் பலியாகினர். 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள அமெரிக்கா, உதவிக்கரம் நீட்ட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஈரான் நாட்டின் தப்ரிஸ் நகரத்தை மையமாகக் கொண்டு அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 250 பேர் உயிரிழந்தனர். சுமார் 2 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஈரானின் வடகிழக்குப் பகுதியான தப்ரிஸ் நகரை சுற்றிய பல கிராமங்கள் நிலநடுக்கங்களில் புதையுண்டு போயுள்ளது. இந்த நிலையில் ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அமெரிக்க அரசு முன்வந்துள்ளது.
இது குறித்து வெள்ளை மளிகை செய்தித் தொடர்பாளர் ஜெய் கார்னே கூறியதாவது,
ஈரான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் பாதிப்பிற்குள்ளாகி இருப்பது அமெரிக்க மக்களுக்கு வருத்தம் அளிக்கிறது. ஈரானில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். ஈரான் மக்களின் கஷ்டத்தில் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகிறோம் என்றார்.