அமைதி, வளம், சமத்துவம் தழைத்தோங்க உறுதியேற்போம்: ராமதாஸ் சுதந்திர தின வாழ்த்து
சென்னை: எங்கும் அமைதி, வளம், சமத்துவம், சமூகநீதி தழைத்தோங்க சுதந்திர தினத்தன்று உறுதியேற்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
இந்தியாவின் 66வது விடுதலை நாள் விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது விடுதலை நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலை பெற்றபின் கடந்த 65 ஆண்டுகளில் கல்வி,பொருளாதாரம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் நாம் அடைந்த முன்னேற்றம் வியக்க வைக்கிறது. ஆனால் இந்த முன்னேற்றங்களின் பயன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளனவா என்று கேட்டால், இல்லவே இல்லை என்பது தான் பொதுவான பதிலாக உள்ளது.
உலகின் மிகவேகமாக வளர்ந்துவரும் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு இந்தியா என நமக்கு நாமே புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் கிராமப்புறங்களில் மக்களில் 10 விழுக்காட்டிற்கும மேற்பட்டோர் நாள்தோறும் 17 ரூபாய் கூட வருவாய் ஈட்ட முடியாமல் வறுமையில் வாடிக் கொண்டிக்கிறார்கள் என்ற செய்தி நமது இதயத்தில் ஈட்டியாய் பாய்கிறது. இன்னொரு புறம் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தை அரசு மதுக்கடைகளில் தொலைத்துவிட்டு ஏழை தொழிலாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பட்டினியில் வாடும் கொடுமையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்தியாவில் நாம் விடுதலை நாள் விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இலங்கையில் உள்ள நமது சொந்தங்கள் கம்பிவேலி முகாம்களுக்குள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நலன்களுக்காக குரல் கொடுப்பதற்குக் கூட தடை விதிக்கபடுவதை பார்க்கும்போது நாம் பெற்ற சுதந்திரத்திற்கு மரியாதை என்ன என நமக்கு நாமே வினா எழுப்பத் தோன்றுகிறது.
இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் வறுமை ஒழியவும், ஈழத்தமிழர்களின் துயரங்கள் விலகவும், எங்கும் அமைதி, வளம், சமத்துவம், சமூகநீதி தழைத்தோங்கவும் இந்த நாளில் உறுதியேற்போம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications