நெல்லை டி.ஐ.ஜி. வரதராஜுக்கு ஜனாதிபதி விருது: குவியும் வாழ்த்துக்கள்
சுதந்திர தினத்தை முன்னி்ட்டு காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜுக்கு ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது. அவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர். சென்னை மாநில கல்லூரியில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். 1991ல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குருப் 1 தேர்வின் மூலம் டி.எஸ்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
முதன் முதலாக சிதம்பரத்திலும், அதைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் டி.எஸ்.பி.யாக பணியாற்றினார். பின்னர் ஏ.டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவில் பணியாற்றினார். கடந்த 2000ம் ஆண்டு எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று மதுரை புறநகரில் பணியாற்றியபோது காந்தி உத்தமர் விருது பெற்றார். அதன் பிறகு சென்னை மாநகர காவல் பணிக்கு மாற்றப்பட்டார்.
3 மாதங்கள் சிபிசிஐடி பிரிவில் துணை கமிஷனராகவும், பின்னர் செயின்ட் தாமஸ் துணை கமிஷனராக மூன்றரை ஆண்டுகளாக பணியாற்றினார். 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அப்போது நெல்லை சரக டிஐஜி பொறுப்பையும கூடுதலாக கவனித்து வந்தார். பின்னர் நெல்லை டிஐஜியாக மாற்றப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்துள்ளது. அவருக்கு நெல்லை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி மற்றும் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.