துபாயிலிருந்து கேரளா வழியாக இந்தியா முழுவதும் அவதூறைப் பரப்பும் தீவிரவாதிகள்- ஐபி
பல்வேறு இணையதளங்கள் உள்ளிட்டவற்றில் வெளியாகும் மத துவேஷம் தொடர்பான கட்டுரைகள், புகைப்படங்கள், செய்திகள் பெரும்பாலும் துபாயிலிருந்துதான் போஸ்ட் செய்யப்படுவதாக ஐபியின் சைபர் விங் பிரிவு கண்டுபிடித்துள்ளது.
இவற்றை துபாயில் வைத்து முடிவுசெய்து இந்தியாவில் உள்ள தங்களது பிரதிநிதிகள் மூலமாக வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் விஷமிகள் என்பதையும் கண்டுபிடித்துள்ளது ஐபி.
இதுகுறித்து ஐபி அதிகாரி ஒருவர் கூறுகையில், பல்வேறு மதப் பிரிவினருக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் போஸ்ட்டுகளை துபாயிலிருந்துதான் இறக்குமதி செய்கிறார்கள். இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான பிளாக் போஸ்ட்டுகள், இணையதள கட்டுரைகள், புகைப்படங்கள், வீடியோக்களில் 60 சதவீதம் துபாயிலிருந்துதான் வருகின்றன. இவற்றை கேரளாவில் உள்ள சிலர் மூலம் அப்லோட் செய்கிறார்கள் அல்லது இமெயில் மூலம் பரவச் செய்கிறார்கள். பாகிஸ்தானிலிருந்தும் அப்லோட் செய்வதும் உண்டு.
மலபார் பகுதியில் உள்ள தீவிரப் போக்கு கொண்ட சிலர் மூலம் இவை பரப்பப்படுகின்றன. இதற்காகவே தீவிரவாத அமைப்புகள் தங்களது பிரதிநிதிகளை மலபார் பகுதியில் வைத்துள்ளன. இவர்களுக்கு வேலையே விஷமக் கருத்துக்களைப் பரப்புவதுதான். மேலும் கேரளாவுக்கு வரும் வெளிநாட்டு நிதிகளில் துபாயிலிருந்து வரும் பணம்தான் அதிகமாக உள்ளது.
இந்த சதி வேலைகளில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பல்வேறு இந்திய இணையதளங்களை ஏற்கனவே ஐஎஸ்ஐ ஹேக் செய்த வரலாறு உண்டு. சைபர் உலகில் ஐஎஸ்ஐயின் விஷமம் உலகம் அறிந்ததுதான். அதில் அவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதும் முக்கியமானது என்கிறார் அவர்.
இதற்கிடையே, மலபார் பகுதியில் இதுபோன்ற விஷமக் கருத்துகக்ளைப் பரப்புவோர் குறித்து தீவிரக் கண்காணிப்பில் மாநில உளவுப் பிரிவு போலீஸாருடன் இணைந்து ஐபி அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து இந்த நெட்வொர்க்கின் மூலம் எங்குள்ளது என்பதைக் கண்டறிய தீர்மானித்துள்ளனராம்.
இதற்கிடையே, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு பகுதியிலிருந்து ஏராளமான விஷம செய்திகள் அப்லோட் ஆகியுள்ளதையும் மாநில உளவுப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.