ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரும் மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர்களாக இருந்த ஆ. ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இந்த வழக்கில் ப. சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமியும் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் பிரசாந்த் பூஷனும் சிபிஐ தனிநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
ஆனால் ப.சிதம்பரத்தை ஸ்பெக்ட்ரம் வழக்கில் சேர்க்க எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று கூறி சிபிஐ தனிநீதிமன்றம் இருவரது மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டது. இதன் பினன்ர் இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த இரண்டு மனுக்களையும் நீதிபதி சிங்வி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்து இன்று தீர்ப்பளித்தனர். இன்றைய தீர்ப்பில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் சதியில் சிதம்பரத்துக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறி இரண்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சாமி, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கக் கோரித்தான் தாம் மனுத்தாக்கல் செய்திருந்ததாகவும் ஆனால் ஸ்பெக்ட்ரம் "சதி"யில் சிதம்பரத்துக்கு தொடர்பில்லை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்றார். மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்யப் போவதாகவும் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications