நெல்லையில் மின்தடையால் சிறு தொழில்கள் முடக்கம்- சுமார் ரூ.75 கோடி வரை இழப்பு
தமிழகத்துக்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 10,530 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் காற்றாலைகள் மூலம் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மெகாவாட்டும், தெர்மல் உள்ளிட்ட இதர வகைகள் மூலம் 6 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் பெறப்படுகிறது. மின் தேவைக்கு ஏற்றர்போல் மின்உற்பத்தி இல்லாத காரணத்தால் தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கதை ஆகிவிட்டது.
நெல்லையில் மின்வெட்டால் பல்வேறு சிறு தொழிற்சாலைகளில் பணிகள் முடங்கி உள்ளன. குறிப்பாக பிளாஸ்டிக், கூடைகள், அலுமினிய பாத்திரங்கள், மரஅறுப்பு ஆலைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இந்த மாவட்டத்தில் தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் தொழில்கள் முடங்கியதுடன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.
இது குறித்து சிறுதொழில் செய்வோர் சிலர் கூறியதாவது,
கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கடுமையான மின் வெட்டு இருந்தது. அதன்பிறகு காற்றாலைகள் மூலம் ஒரளவு மின்சாரம் கிடைத்ததால் உற்பத்தி பாதிப்பு ஒரளவு குறைந்தது. தற்போது காற்றாலைகள் மூலம் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் மீண்டும் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் வர்த்தகத்தில் ரூ.75 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. ஏராளமான தொழிலாளர்களும் வேலை இழந்து தவித்து வருகின்றனர் என்றனர்.