"விஜய்யை நாங்க மிரட்டவில்லை!" ஆளுநர் பஞ்சாயத்திற்கு நடுவே திடீரென பாஜகவிடம் இருந்து வந்த விளக்கம்!
சென்னை: தமிழக அரசியலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பிறகும் கூட ஆட்சியை அமைக்க முடியாமல் விஜய் திணறி வருகிறார். 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆளுநர் வடிவில் முட்டுக்கட்டை வந்துள்ளது. இதற்கு பாஜக தான் காரணம் எனப் பலரும் விமர்சித்து வரும் சூழலில், இது தொடர்பாக பாஜக தரப்பு சில முக்கியமான தகவல்களைக் கூறியிருக்கிறது.
நேற்று மாலை ஆளுநரைச் சந்தித்த விஜய், இன்று காலை மீண்டும் அவரைச் சந்தித்துப் பேசினார். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் இதுவரை அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை.. மெஜாரிட்டி இல்லாமல் எப்படிச் சிக்கலின்றி... ஆட்சி நடத்த முடியும் என்று ஆளுநர் தரப்பு கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.

தமிழக தலைவர்கள்
இருப்பினும், இதற்குத் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது சட்டசபையில் தானே தவிர ஆளுநர் மாளிகையில் இல்லை என்றும் தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் விஜய்யை ஆட்சி அமைக்க அழைத்தாக வேண்டும் என்றே பல்வேறு கட்சி தலைவர்களும் கூறுகிறார்கள்.
பாஜக விளக்கம்
இதற்கிடையே இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும் பலரும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இது ஒரு தொங்கு சட்டமன்றம். விஜய்யிடம் பெரும்பான்மை இல்லை என்பதுதான் உண்மை. அவர் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும். ஆளுநர் அரசியல் சாசனப்படிதான் நடக்கிறார். இதில் ராஜ்பவனுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. விஜய்யை யாரும் மிரட்டவில்லை.. எல்லாம் ஜனநாயக முறைப்படி நடக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
கள நிலவரம் என்ன
தமிழ்நாடு தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் விஜய் இரண்டு இடங்களில் வென்றுள்ளதால், ஒரு இடத்தை ராஜினாமா செய்ய வேண்டும் (-1). சபாநாயகர் ஓட்டுப் போட முடியாது (-1). ஆக, தவெகவின் நேரடி பலம் 106. காங்கிரஸ் 5 எம்.எல்.ஏ-க்கள் ஏற்கனவே ஆதரவு தந்துவிட்டனர். சிபிஐ, சிபிஎம் மற்றும் விசிகவிடம் தலா 2 இடங்கள் என மொத்தம் 6 இடங்கள் இருந்தால், விஜய்யின் பலம் 117-ஐ எட்டும். இருப்பினும், இதுவரை காங்கிரஸ் மட்டுமே ஆதரவு கொடுத்துள்ளது. சிபிஐ, சிபிஎம், விசிக அதிகாரப்பூர்வமாக தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
அதேநேரம் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சட்டசபையில் சந்திக்கத் தயாராக இருப்பதாகவே தவெக தரப்பு தெரிவிக்கிறது. சட்டசபையில் தங்கள் பலத்தை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என்பதே விஜய் தரப்பின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
தமிழ்நாடு தேர்தல்
நடந்து முடிந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக 59 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக 47 இடங்களில் மட்டுமே வென்று 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் 5 இடங்கள், பாமக 4 இடங்கள், பாமக 4 இடங்களில் வென்றுள்ளன. சிபிஐ, சிபிஎம், விசிக ஐயுஎம்எல் தலா இரு இடங்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications