இயற்கை வளங்களை ஏலம் விடுவது குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு - முதல்வர் ஜெ. ஆலோசனை
சென்னை: ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட இயற்கை வளங்களை ஏலம் விடுவது தொடர்பாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முதலில் வருபவருக்கே முதலில்' என்ற அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று கூறி, கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 10-ந் தேதிக்குப் பிறகு செய்யப்பட்ட ஒதுக்கீடுகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததோடு, நாட்டின் அனைத்து இயற்கை வளங்களும் ஏலத்தில் விடப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து, இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 143 (1)-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் கருத்துரையைப் பெற இந்தியக் குடியரசுத் தலைவரால் அனுப்பப்பட்ட குறிப்புரையின் பேரில், மாநில அரசுகளின் கருத்துகளை உச்ச நீதிமன்றம் கோரியுள்ளது.
இதுகுறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை முடிவு செய்வது குறித்து, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சர், அரசு தலைமை வழக்கறிஞர், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், தலைமைச் செயலாளர், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர் (செலவினம்), சட்டத் துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.