டெசோ தீர்மானங்களை ஸ்டாலின், டி.ஆர்.பாலு மூலமாக ஐ.நா.வுக்கு அனுப்புவோம்: கருணாநிதி
திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் அம்பத்தூரில் நடைபெற்ற டெசோ மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:
தமிழ் ஈழம் என்று குரல் கொடுத்தவர்கள் இன்று எதிர்ப்பு குரல் தெரிவித்தால் என்ன பொருள்? நாதஸ்வர இசை முழங்கும்போது பக்கத்தில் உள்ள இன்னொரு வித்வானும் அதற்கு ஏற்றார் போல் நாதஸ்வரம் வாசித்தால் தான் கச்சேரி களைகட்டும்.
ஈழத்தமிழர்களுக்கு வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கொடுக்க நானும், சில தமிழக தலைவர்களும் சேர்ந்து டெசோ மாநாட்டை மதுரையில் நடத்தினோம். அந்த மாநாட்டிற்கும், தற்போது நடைபெற்ற மாநாட்டிற்கும் பல வருடம் இடைவெளி இருந்தாலும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. இரண்டு மாநாடுமே தமிழ் ஈழ வாழ்வுரிமையை பாதுகாக்கத்தான் நடத்தப்பட்டது. அன்று ஒன்றாக என்னுடன் சேர்ந்து பணியாற்றிவர்கள் இன்று வேறு இடத்திற்கு சென்று எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள்.
ஒற்றுமை இல்லாததால் கொல்லபப்ட்டனர்
ஈழத்தமிழர்களிடம் வீரம், ஆற்றல், அஞ்சாமை இருந்தது எல்லாம் இருந்தும் அவர்களிடம் ஒற்றுமை இல்லை. அதனால் தான் அவர்கள் கொல்லப்பட்டு வந்தனர். மதுரையில் நடந்த டெசோ மாநாட்டில் நானும், அன்றைக்கு ஆந்திர முதல்-மந்திரியாக இருந்த என்.டி.ராமராவும், ராம்விலாஸ் பாஸ்வானும், வாஜ்பாயும் ஈழத்தமிழர் போராட்ட குழுவினரை அழைத்து, உங்களுக்கு என்ன குறை, ஏன் மோதிக்கொள்கிறீர்கள்? என்று கேட்டோம். அப்போது அவர்கள் ஒற்றுமையாக இருப்போம் என்று சத்தியம் செய்தனர். அவர்கள் அதை உறுதியாக கடைபிடித்து இருந்தால் தமிழ் ஈழம் கிடைத்திருக்கும். அதன் கோட்டை முகப்பில் புலிக் கொடி பறந்திருக்கும்.
அடங்கா கோபம் வந்தது
தமிழ் ஈழத்தில் இன்று தவிக்கும் மக்களை பார்த்து நாம் கண்ணீர் விடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சென்னையில் டெசோ மாநாடு நடத்துவதற்காக ஆயத்தமாகி கொண்டிருந்தபோது, மத்திய அரசு அதிகாரி ஒருவர் பிரதமருக்கு தெரியாமல் ஈழம் என்ற வார்த்தையை ஒத்துக்கொள்ள முடியாது என்று அறிவித்தார். அதைக் கேட்ட எனக்கு அடங்காத கோபம். இது குறித்து டி.ஆர்.பாலுவிடம் கேட்டேன் அவர் டெல்லிக்கு தொடர்பு கொண்டு பேசினார். சங்க இலக்கியங்களிலேயே ஈழம் என்ற வார்த்தை உள்ளது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். அதன்பிறகு மனம் திருந்தி ஒத்துக்கொண்டு, ஈழம் என்ற வார்த்தையை பயன்படுத்தி மாநாடு நடத்தலாம் என்று அனுமதி அளித்தனர்.
ஐ.நா.வுக்கு அனுப்புவோம்
டெசோ மாநாடு 12-ந் தேதி நடந்து முடிந்தது. அதில் நிறைவேற்றிய தீர்மானங்கள் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஒரு பிரதியையும், சோனியாகாந்தியை சந்தித்து மற்றொரு பிரதியையும் வழங்கினார்கள். அதோடு விடாமல் நாம் மேலும் என்ன சொல்ல விரும்புகிறோமோ, அதையும் சேர்த்து விரைவில் 20 அல்லது 30 நாட்களுக்குள் டெசோ மாநாட்டு தீர்மானங்கள் ஐ.நா. மன்றம் அனுப்பப்படும். அந்த தீர்மானங்களை டி.ஆர்.பாலு, மு.க.ஸ்டாலின் ஆகியோர் மூலம் வழங்கப்படும். ஐ.நா. நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகின்றேன் என்றார் அவர்.