காதல் தோல்வி: மதுரை மருத்துவ கல்லூரி விடுதியில் பெண் டாக்டர் தற்கொலை!
மதுரை: காதலித்தவர் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதால் மதுரையில் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் ஏரோநாடிக் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த செய்யார் இவர்களது சொந்த ஊர். இவருடைய மூத்த மகள் ஹரிணி எம்.பி.பி.எஸ். படித்து விட்டு மதுரை மருத்துவ கல்லூரியில் அறுவைசிகிச்சை பிரிவில் பட்ட மேற்படிப்பு இறுதியாண்டு படித்து வந்தார்.
ஹரிணி ஞாயிறன்று இரவு பணி முடித்து விடுதியில் படுக்கச் சென்றார். திங்கட்கிழமை காலையில் மறுபடியும் 8 மணிக்கு பணிக்கு வரவேண்டும். ஆனால் அவர் வராததால் சகமாணவிகள் அவரது செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர் போனை எடுக்காமல் போகவே சந்தேகம் அடைந்து விடுதிக்கு விரைந்து சென்று ஹரிணியின் அறைக் கதவை தட்டினார்கள். ஆனால் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்குள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்ட நிலையில் ஹரிணி தொங்கிக் கொண்டிருந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஹரிணி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
காதல் தோல்வி
மாணவி ஹரிணியின் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காதல் சம்பவமே தற்கொலைக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது. ஹரிணி பட்டமேற்படிப்பு படிக்க மதுரை மருத்துவ கல்லூரிக்கு வந்தபோது, தர்மபுரியை சேர்ந்த பட்டமேற்படிப்பு மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த ஆண்டு அவர் பட்டமேற்படிப்பு படித்து முடித்து, தற்போது தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் ஆர்த்தோ டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
ஹரிணி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஆர்த்தோ டாக்டரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் தன் பெற்றோர் சம்மதம் தெரிவித்தால்தான் நம் திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்க வில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களாக ஹரிணி தன் காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி செல்போனில் பேசியுள்ளார். ஞாயிறு இரவு 11.45 மணிக்கு கடைசியாக ஹரிணி தனது காதலனிடம் கடைசியாக பேசினார். இதையடுத்து, தான் தூக்குப்போடுவது போல் படம் ஒன்றையும் வரைந்து காதலனுக்கு இ-மெயிலில் அனுப்பியுள்ளார். அதற்கு காதலனிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை. இதனால் ஹரிணி மனம் உடைந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காதல் தோல்வியினால் மருத்துவ மேற்படிப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மருத்துவ கல்லூரி மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications