குரூப் 2 போன்று குரூப் 4 தேர்வு வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதா? பரபரப்பு தகவல்
ஈரோடு: குரூப் 2 தேர்வைப் போன்று குரூப் 4 தேர்விலும் மோசடி நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியானதையடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தேர்வுக்கு முன்பாக வினாத்தாளை வெளியாக்கிய பலரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதர்ராஜ் தான் வினாத்தாள் விற்றார் என்பது தெரிய வந்தது.
குரூப் 2 தேர்வுக்கு முன்பு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் வினாத்தாள் குளறுபடி ஏற்பட்டது தொடர்பாக தர்மபுரியைச் சேர்ந்த 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குரூப் 4 தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் குரூப் 2 தேர்வு போன்று குரூப் 4 வினாத்தாளும் தேர்வுக்கு முன்னதாகவே வெளியாகியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கைதானவர்கள் தாங்கள் அளித்த வாக்குமூலத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
குரூப் 4 வினாத்தாளையும் ஸ்ரீதர்ரஜ் தான் வெளியிட்டுள்ளார். சதீஷ்குமார் என்பவர் ஸ்ரீதர்ராஜிடம் ரூ.2 லட்சம் கொடுத்து குரூப் 4 வினாத்தாள் வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறப்படுகிறது. இநத வினாத்தாளை வினியோகித்த ஆந்திராவைச் சேர்ந்த ராவ் என்பவரை பிடிக்க தனிப்படையினர் ஆந்திரா, கர்நாடகா விரைந்துள்ளனர்.