அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளை கவர இலவச ஆடைகள் வழங்கும் திட்டம்-முதல்வர் துவக்கி வைத்தார்
சென்னை: அங்கன்வாடி மையங்களுக்கு அதிகளவிலான குழந்தைகளை கவரும் வகையில் 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச வண்ண ஆடைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். மேலும் 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
முதல்வர் ஜெயலலிதா கடந்த 14.06.2012 அன்று சட்டப்பேரவையில், அங்கன்வாடி மையங்களுக்கு 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை ஈர்க்கும் விதமாக ரூ.4 கோடியே 30 லட்சம் செலவில் 2 இணை வண்ண ஆடைகள் வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் முதற்கட்டமாக சென்னை, வேலூர், திருச்சி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் 2,01,032 குழந்தைகள் பயன் பெறுவார்கள் என்றும் அறிவித்தார்.
இதன்படி 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு ஈர்க்கும் வகையில் அந்த குழந்தைகளுக்கு 2 இணை வண்ண உடைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா 7 குழந்தைகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 1,02,540 ஆண் குழந்தைகளும், 98,492 பெண் குழந்தைகளும் பயன் பெறுவார்கள்.
திருநங்கைகளுக்கு உதவித்தொகை:
கடந்த 2012-13ம் ஆண்டிற்கான சமூக நலத்துறை மானியக் கோரிக்கையில் 40 வயதுக்கு மேற்பட்டு, ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
திருநங்கைகள் நல வாரியம் மூலம் திருநங்கைகள் அடையாளம் காணப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 3125 திருநங்கைகள் அடையாள அட்டை பெற்றுள்ளனர். அவர்களில் 40 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.
நடப்பு ஆண்டில் திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் ஓய்வூதியம் வழங்க ரூ.1 கோடியே 17 லட்சத்து 59 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மைச் செயலாளர், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications