வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் மரணம்

ஆனந்த் நகரில் குரியனின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வயோதிகம் காரணமாக குரியன் மரணமடைந்துள்ளதாகவும். அவருக்கு சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சோதி தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகலில் குரியனின் இறுதிச் சடங்குகள் நடைபெறும். இந்தியாவின் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர் குரியன் ஆழார். உலகின் மிகப் பெரிய பால் வளர்ச்சித் திட்டத்தை அவர்தான் உருவாக்கினார். அதற்குப் பெயர் ஆபரேஷன் பிளட் - Operation Flood - என்பதாகும்.
மேலும் ஆனந்த் நகரில் அவர் உருவாக்கிய பால் வளர்ச்சித் திட்டம் இந்தியாவில் பெரும் பால் வளப் புரட்சியை உருவாக்கியது. மேலும், இந்தியாவை பால் உற்பத்தியில் முலிடத்திற்குக் கொண்டு வந்த பெருமையும் குரியனையேச் சாரும். இன்று நாடு முழுவதும் 1 கோடி விவசாயிகள் பால் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட கூட்டுறவு பால் சந்தைகள் உள்ளன. 2 கோடி லிட்டர் பால் ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்ககது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் குரியன்தான்.
1949ம் ஆண்டு தனக்குக் கிடைத்த மிகப் பெரிய அரசு வேலையை விட்டு விட்டு கூட்டுறவு பால் பண்ணை மேம்பாட்டில் குதித்தார் குரியன். அன்று முதல் அவரது கடுமையான உழைப்பு காரணமாக 50களில் தினசரி சில ஆயிரம் லிட்டர் பால் என்ற அளவில் இருந்த இந்தியாவின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 90 லட்சம் லிட்டர் என்ற இமாலய அளவை எட்டியது. இந்த அபாரமான திட்டத்தை அமுல் என்ற பெயரில் குஜராத்தில் உருவாக்கி அமல்படுத்தினார் குரியன். இன்று இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தக பிராண்டுகளில் ஒன்றாக அமுல் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமுல் பிராண்ட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவு பால் பண்ணைகள் இன்று ரூ. 10,000 கோடி என்ற அளவில் வருவாய் ஈட்டி வருகின்றன. பால், வெண்ணை, நெய், தயிர், பால் பவுடர், இனிப்புகள், ஐஸ் கிரீம், சாக்லேட் உள்பட பல பொருட்களை அமுல் தயாரிக்கிறது. குஜராத்தின் 15 மாவட்டங்களில் 30 லட்சம் விவசாயிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது அமுல்.
அமுல் பிராண்டுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்த பால் உற்பத்தி மாடல் நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆவின், நந்தினி, வெர்கா, சுதா, மகானந்தா என்று பல பிராண்டுகள் நடைமுறைக்கு வந்தன.
இந்தியாவின் பால் துறை மிகப் பெரிய வளர்ச்சியையும், சாதனையையும் படைக்க குரியன்தான் முக்கியக் காரணம். இதனால்தான் அவரது திட்டம் வெண்மைப் புரட்சி என்று அழைக்கப்படுகிறது.
தான் உருவாக்கிய வெண்மைப் புரட்சி எழும்பிய இடமான குஜராத் மாநிலத்திலேயே கடைசி வரை வாழ்ந்து மறைந்துள்ளார் குரியன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications